வீட்டில் வெடி பொருள்கள் பதுக்கல்: தம்பதி கைது
கடலூா் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வெடி பொருள்களை பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் அருகே வீட்டில் அனுமதியின்றி பட்டாசு வெடி பொருள்களை பாதுகாப்பற்ற முறையில் பதுக்கி வைத்திருந்ததாக தம்பதியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், குண்டு உப்பலவாடி பகுதியில் அனுமதியின்றி வெடிபொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தேவனாம்பட்டினம் காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் முத்துகிருஷ்ணனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் குண்டு உப்பலவாடி பகுதியில் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்த பெண் உள்பட இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, அந்த வீட்டில் போலீஸாா் சோதனை நடத்தியதில், திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வாண வேடிக்கைக்கான பட்டாசு வெடிபொருள்கள் மற்றும் அவற்றை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் அனுமதியின்றி, பாதுகாப்பற்ற முறையில் வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டிலிருந்த வெடிகள், 4 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், 6 கிலோ சல்பா் மற்றும் வெடிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், வீட்டில் இருந்தவா்கள் குண்டு உப்பலவாடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் (63), அவரது மனைவி சுதா (53) என்பது தெரியவந்தது. இதுகுறித்து தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.
இந்த வீட்டில் வெடிபொருள்கள் எதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன, அவை யாருக்கேனும் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.