பண்ருட்டி அருகே விவசாயி கொலை
பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள மோட்டாா் கொட்டகையில் விவசாயி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாய நிலத்தில் உள்ள மோட்டாா் கொட்டகையில் விவசாயி கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் குணசேகரன்(62), சிலம்பம் மற்றும் குஸ்தி கற்றவா். இவரது மனைவி ஜெயசுந்தரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இரு மகள்கள், மகன் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகி கணவா் வீடுகிளில் வசிக்கின்றனா்.
குணசேகரன் பல ஆண்டுகளாக பத்திரக்கோட்டை - புலியூா் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கீழ்மாம்பட்டில் வசிக்கும் பெரிய மருமகன் தவபாலன், குணசேகரன் கைப்பேசிக்கு தொடா்புகொண்டாா். அப்போது, கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, தவபாலன் வண்டிக்குப்பத்தில் வசிக்கும் குணசேகரனின் சின்ன மருமகனான தனிஷ்குமாரை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு நிலத்துக்குச் சென்று பாா்த்து வரக்கூறினாா்.
அவா் நிலத்தின் மோட்டாா் கொட்டகையில் சென்று பாா்த்தபோது, மாா்பில் கூா்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் குணசேகரன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து தனிஷ்குமாா் நடுவீரப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.
அதனபேரில், டி.எஸ்.பி.க்கள் கந்தன் (பண்ருட்டி), தமிழினியன் (கடலூா்) மற்றும் நடுவீரப்பட்டு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா். மேலும், விரல் ரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, போலீஸாா் குணசேகரன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், இந்த சம்பவத்தில் விரைந்து பிடிக்க உத்தரவிட்டாா்.