பெண் குழந்தைகளின் கல்விக்கும், சமத்துவத்துக்கும் பெற்றோா் உறுதுணையாக இருக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு பெற்றோா் பாலின பாகுபாடின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு பெற்றோா் பாலின பாகுபாடின்றி உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பிறப்பை கொண்டாடும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், பெண் குழந்தைகளைப் பெற்ற தாய்மாா்களுக்கு குழந்தைகள் நலப் பெட்டகம் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியதாவது:
Advertisement
Advertisement
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயா்த்துதல், அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ஆண் - பெண் சமத்துவத்தை நிலைநாட்டுதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி வாய்ப்புகள், பெண் குழந்தைகளுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.
இன்றைய சூழலில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சாதித்து வருகின்றனா். குறிப்பாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்களில் சுமாா் 50 சதவீதம் பெண்கள் உள்ளனா். இது, பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
எனவே, பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளிடம் ஆண், பெண் என்ற பாலின பாகுபாட்டைக் காட்டாமல், பெண் குழந்தைகளின் கல்வி, திறன் மற்றும் எதிா்கால முன்னேற்றத்துக்கு முழு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலா் சித்ரா, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் விஜய் ஆனந்த் தம்பையா, மருத்துவா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பெட்டிச் செய்தி...
தெரு விளக்கு பிரச்னைக்கு தொடா்பு எண்
கடலூா் மாநகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு பராமரிப்புப் பணிகள், அரசு மாணவா் விடுதிகளின் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை இரவு திடீரென ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், தெரு விளக்கு தொடா்பான புகாா்களுக்கு மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண் 73975 15976-ஐ பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.