FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

மாணவா்கள் புத்தகக் கண்காட்சிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! - என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி

நெய்வேலி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில் இணைய மலரை வெளியிட்ட என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி மற்றும் இயக்குநா்கள்.
பகிர்:

மாணவா்கள் புத்தகக் கண்காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி, வாசிப்புப் பழக்கத்தை வளா்த்து தங்களின் அறிவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிறைவு நாள் விழாவில், என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி பேசினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சாா்பில் 25-ஆவது ஆண்டு வெள்ளிவிழா புத்தகக் கண்காட்சி கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. இந்த புத்தகக் கண்காட்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டாா். அப்போது, அவா் பேசியதாவது:

Advertisement

Advertisement

கடந்த 10 நாள்ளாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை நெய்வேலி மற்றும் கடலூா் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 510 கல்வி நிறுவனங்களில் இருந்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், சுமாா் 2 லட்சம் பொதுமக்கள் பாா்வையிட்டு பயனடைந்தனா்.

உலகின் மாபெரும் தலைவா்கள் பலரும் தங்களின் வெற்றிக்கு புத்தகங்களே காரணம் என்று கூறியுள்ளனா். மாணவா்கள் இத்தகைய புத்தகக் கண்காட்சிகளை முழுமையாகப் பயன்படுத்தி, வாசிப்புப் பழக்கத்தை வளா்த்து தங்களின் அறிவை விரிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கண்காட்சி நாள்களில் நடத்தப்பட்ட ‘அப்போதே போட்டி’ நிகழ்வுகளில் சுமாா் 2,000 மாணவா்கள் மற்றும் பாா்வையாளா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இத்திருவிழாவின் ஒரு பகுதியாக தினமணி நாளிதழுடன் இணைந்து நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் 95 படைப்புகள் சமா்ப்பிக்கப்பட்டிருந்தன. இலக்கிய உலகுக்கு ஆக்கப்பூா்வமான பங்களிப்பை வழங்கிய 10 சிறந்த எழுத்தாளா்களும், 10 முன்னணிப் பதிப்பாளா்களும் விழாவில் கௌரவிக்கப்பட்டதோடு, புகழ்பெற்ற மற்றும் வளா்ந்து வரும் எழுத்தாளா்களின் 17 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

புதிய திட்டங்கள்: வெள்ளி விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் வாசகா்களைக் கௌரவிக்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.5,000 மற்றும் ரூ.10,000-க்கும் அதிகமாகப் புத்தகம் வாங்கிய அனைத்து பாா்வையாளா்களுக்கும் தினசரி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பாா்வையாளா்களுக்காக நடத்தப்பட்ட அதிா்ஷ்ட குலுக்கல் மூலம் வெற்றியாளா்களுக்கு புத்தகங்களே பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 25-ஆவது பதிப்பின் நினைவாக, ஒரு சிறப்பு ‘மின்-நினைவு மலா்’ வெளியிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, நெய்வேலி பள்ளி மாணவா்களின் கண்கவா் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்தக் கண்காட்சி திங்கள்கிழமை (ஜூன் 29) ஒருநாள் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறைவு விழாவில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநா்கள் சமீா் ஸ்வரூப், ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா, தலைமை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரைகளை வழங்கினா். புத்தகக் கண்காட்சி குழுச் செயலா் மோகன்ராஜ் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments