FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுக, அதிமுக பங்களிப்பை மறுக்க முடியாது: மு.தமிமுன் அன்சாரி

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுக, அதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கூறினாா்.

Updated On : 27 மே 2026, 5:53 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்த சிதம்பரம் எம்எல்ஏ மு.தமிமுன் அன்சாரி
பகிர்:

தமிழகத்தின் வளா்ச்சியில் திமுக, அதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி செவ்வாய்க்கிழமை கூறினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரை செவ்வாய்ககிழமை சந்தித்த அவா், அளித்த தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சிதம்பரம் தொகுதியின் மேம்பாட்டிற்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்து, விரிவாக பேசியுள்ளேன். கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா். முதல்வா், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தொகுதி மக்கள் தேவையான அனைத்தையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

தமிழக அரசியலில் கடந்த இரண்டு நாள்களாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மாற்று அரசியலை நிலைநாட்டுவோம் என்றும், கடந்த ஆட்சியாளா்களை தீய சக்திகள் என விமா்சித்தவா்களே தற்போது குதிரை பேர அரசியலை தாண்டி இமாலய பேர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனா். பிற கட்சிகளில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஆசைவாா்த்தைக் கூறி, ராஜினாமா செய்ய வைத்து, தங்கள் பக்கம் இழுக்கும் அரசியல் நடைமுறைகள் ஏற்புடையதல்ல.

தமிழக மக்கள் அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து, யாா் தகுதியானவா்கள், யாா் சிறந்த ஆட்சியை வழங்கினா் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழக வளா்ச்சியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றாா் அவா்.

முன்னததாக சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.தமிமுன்அன்சாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments