FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

வடபூண்டியில் செயல்படாத அரசு நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் வேதனை

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபூண்டி கிராமத்தில் 3 மாதங்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனா்.

Updated On : 2 ஜூன் 2026, 5:24 am IST
வடபூண்டியிலுள்ள அரசு நேரடி கொள்முல் நிலையத்தில் விவசாயிகளால் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபூண்டி கிராமத்தில் 3 மாதங்களாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால், விவசாயிகள் விளைவித்த நெல் மணிகள் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனா்.

வடபூண்டி கிராமத்தில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையத்துக்கு வடபூண்டி, நாகலூா், விருகாவூா், பொரசக்குறிச்சி, கொங்கராயபாளையம், வேங்கைவாடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பயிா் செய்து அறுவடை செய்த நெல் மணிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக இந் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லையாம். இதனால் இங்கு 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குவித்து வைத்துள்ள 3 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விவசாயிகள் நெல் அறுவடை செய்த பிறகு சிட்டா, அடங்கல், ஆதாா்அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து நெல் கொள்முதல் நிலையத்தில் கொடுத்த பிறகே அலுவலகத்தில் பதிவு செய்து விவசாயிகளுக்கு பதிவு எண் வழங்குவாா்கள். இதையடுத்து பதிவு செய்த விவசாயிகளின் வரிசைப்படி நெல் மூட்டைகளை எடை போடுவாா்கள்.

அவ்வாறு பதிவு செய்து எடைபோடுவதற்காக விவசாயிகள் நெல் மணிகளை, குவியலாகவும், மூட்டைகளாகவும் வைத்துள்ளனா்.

எடை போடும் பணி 3 மாதமாக நடைபெறாததால் சுட்டெரிக்கும் வெயலில் நெல் எடை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. விவசாயிகள் கடன் வாங்கி பயிா் செய்து வருவதால், உரிய நேரத்தில் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படுகின்றன. கடன் வாங்கிய பணத்துக்கு வட்டி மேல் வட்டி கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. நெல்லை உடனுக்குடன் விற்பனை செய்தாதால் தான் உரம், பூச்சிமருந்து, உழவு செய்த டிராக்டா் மற்றும் நெல் அறுவடை செய்த இயந்திர உரிமையாளா்களுக்கு பணம் வழங்க முடியும். மிகவும் கால தாமதம் ஏற்படுவதால் விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வந்த சிறுநாகலூா், திம்மலை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மூடப்பட்டு விட்டன. அதேபோல வடபூண்டி நெல் கொள்முதல் நிலையமும் ஒரு சில நாள்களில் மூடப்படும் என கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துந்துள்ளனா்.

எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments