FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மணல் குவாரிகளை திறக்க சிஐடியு வலியுறுத்தல்

புதுவையில் மணல் குவாரிகளை விரைவாக திறக்க அரசு முன் வர வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

புதுவையில் மணல் குவாரிகளை விரைவாக திறக்க அரசு முன் வர வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து சிஐடியூ புதுச்சேரி மாவட்டக் குழுச் செயலாளர் சீனுவாசன் செய்தியாளர்ளிடம் புதன்கிழமை கூறியதாவது:
 புதுச்சேரியில் மணல் தட்டுப்பாட்டால் கடந்த இரு ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களும் வீடு கட்டுவதற்கு மணல் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அரசு கட்டுமானப் பணிகள், அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், சிஐடியூ தொழிற்சங்கம் மணல் தட்டுப்பாட்டை போக்க ஆறுகளில் குவாரிகளை அமைத்து, மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
 அவ்வாறு அனுமதிப்பதன் மூலம் மணல் தட்டுப்பாடு நீங்குவதுடன், கிராமங்களில் உள்ள ஏழை மாட்டு வண்டித் தொழிலாளர்களும் பயன்பெறுவர் என்பதால் வலியுறுத்தி வருகிறோம். அந்த வகையில், புதன்கிழமை மாட்டு வண்டிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து இருந்தோம்.
 இதற்கிடையில், பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அமைச்சரை சந்தித்துப் பேசினோம்.
 அப்போது, மணல் குவாரிகள் திறப்பதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குவாரிகள் திறக்கப்படும். எனவே, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். அதனையேற்று முற்றுகை போராட்டத்தை கைவிட்டோம்.
 விரைவில் மணல் குவாரியை அரசு திறக்க வேண்டும். வருமானமின்றி மாடுகளை பராமரிக்க முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கும் மணல் தட்டுப்பாட்டின் காரணமாக வேலையில்லாமல் உள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கும் கட்டுமான நல வாரியத்தின் மூலமாக வேலையில்லா கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார் சீனுவாசன்.
 பேட்டியின்போது சிஐடியூ துணை செயலாளர்கள் பிரபுராஜ், கலியன், துணைத் தலைவர்கள் மதிவாணன், ராமசாமி, மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் ஜீனானந்தம், செயலாளர் கலியமூர்த்தி, பொருளாளர் செல்வராசு ஆகியோர் உடன் இருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments