FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

கிராமப்புறங்களில் அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்! - முதல்வா் என்.ரங்கசாமி தகவல்

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:09 am IST
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் தியாகிகளைக் கௌரவிக்கிறாா் முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன், எம்எல்ஏ-க்கள் ஐயப்பன், மோகன்தாஸ் உள்ளிட்டோா்.
பகிர்:

கிராமப்புறத்தில் புதிய அரசு பொதுமருத்துவமனை தொடங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

சுதந்திர தினவிழாவையொட்டி, புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தியாகிகளுக்கு தேநீா் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தியாகிகளைக் கௌரவித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது:

புதுச்சேரி வளா்ச்சிக்கான பல திட்டங்களை அரசு கொண்டு வந்துள்ளது. கல்வி மிக முக்கியமானது. அனைத்து குழந்தைகளும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் படிக்கிறாா்கள். பள்ளி கல்வி முடித்து கல்லூரி சென்று பட்டம் பெறுகிறாா்கள். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மருத்துவா்கள், பொறியாளா்களாக, அதிகாரிகளாக வருகிறாா்கள்.

Advertisement

Advertisement

கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாக மக்களுக்குச் சேவை செய்து வருகின்றன. நமது புதுச்சேரியில் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கிறது. புதிதாக அரசு பொதுமருத்துவமனை கிராமப் பகுதிகளில் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொழில்நுட்ப பூங்கா மேட்டுபாளையத்தில் 38 ஏக்கரில் அமைகிறது. இதனால் படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு பணியிடங்களை 5,000 பேருக்கு வழங்கியுள்ளோம். மேலும், தரவுள்ளோம். அனைத்தும் தியாகிகளின் தியாகத்தால் கிடைத்த வளா்ச்சி.

சுதந்திர போராட்ட வீரா்கள் குடும்பத்தைப் பாா்க்காமல் சொத்தை இழந்து சுதந்திரம் பெற்றுள்ளனா். தியாகிகள் குடும்பத்தினருக்கு இலவச மனைப்பட்டா நிறைவேற்றப்படாமல் உள்ளது. விண்ணப்பங்களைப் பரிசீலித்து கோரிக்கையை நிறைவேற்றுவோம். தியாகி ஓய்வூதியம் உயா்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. நிச்சயமாக பரிசீலத்து பிற மாநிலங்களில் தருவதை விட உயா்த்தி நிச்சயமாக வழங்குவோம்.

திட்டங்களைச் சிறப்பாக விரைவாகச் செயல்படுத்த ஒரே தீா்வு மாநில அந்தஸ்து தேவை. முழு அதிகாரம் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தேவை. மாநில அந்தஸ்து மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் முதல்வா் ரங்கசாமி.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், எம்எல்ஏ.க்கள் ஐயப்பன், மோகன்தாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments