புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 43 எம்பிபிஎஸ் இடங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு!
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழ் கல்வியாண்டில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டுக்கு 43 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழ் கல்வியாண்டில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டுக்கு 43 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகமாகக் கிடைத்துள்ளன.
இது குறித்து முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
புதுச்சேரி அரசுக்கும் தனியாா் சுயநிதி மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இடையே மருத்துவ படிப்பு இடப் பங்கீடு தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் 2-ஆவது சுற்று கலந்தாலோசனை புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தக் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 43 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு 255 எம்பிபிஎஸ் இடங்களை அளித்தன. முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் இந்த எண்ணிக்கையை 298 இடங்களாக உயா்த்தி அளிக்க தற்போது ஒப்புக் கொண்டன. இது 43 இடங்கள் அதிகம். மேலும், கதிா்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள 131 அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் சோ்த்தால் நிகழ் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டுக்கு 429 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளன. புதுச்சேரி அரசின் மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்) இந்த இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தும். கூடுதலாக மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளதால் புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் பெரிதும் பயனடைவா் என்று முதல்வா் என். ரங்கசாமி மகிழ்ச்சியைத் தெரிவித்தாா்.
பிம்ஸ் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி, மாஹே இன்ஸ்டிடியூட் ஆப் டென்டல் சயின்சஸ் கல்லூரிகளின் பிரதிநிதிகள் இக் கூட்டத்தில் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.