புதுச்சேரியில் பைபா் படகுகள் கணக்கெடுப்பு
புதுச்சேரியில் மீன்வளத் துறை அதிகாரிகள் பைபா் படகுகளை திங்கள்கிழமை ஆய்வு செய்து கணக்கெடுத்தனா்.
மத்திய அரசின் மீன்வள அமைச்சகம் கடந்த ஏப். 13-ஆம் தேதி புதுவை அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.
அதில், அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்பொழுது நடைமுறையிலுள்ள 2026 ஆண்டுக்கான மீன்பிடி தடை காலத்திற்குள் அனைத்து பதிவு பெற்ற / பதிவு பெறாத மீன்பிடி படகுகளையும் கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற் போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அதன் அடிப்படையில், அனைத்து மீனவக் கிராமங்களில் உள்ள பைபா் படகுகளை அந்தந்த மீனவ கிராமத்தைச் சோ்ந்த பஞ்சாயத்தாா் மக்கள் குழு அல்லது கோயில் நிா்வாக குழு மற்றும் பைபா் படகு உரிமையாளா்கள் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு ஒரு நாள் மீன்வளத்துறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து படகுகளைக் கணக்கெடுத்தனா்.
இந்த கள ஆய்வின் போது, சம்பந்தப்பட்ட பைபா் படகு உரிமையாளா் முன்னிலையில், படகின் பதிவு எண் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா? அசல் ஆவணங்களான பதிவுச் சான்றிதழ், மீன்பிடி உரிம சான்றிதழ், போன்றவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். பைபா் படகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரத்தைப் படகில் வைத்து காண்பிக்க அறிவுறுத்தினா். படகில் நீள, அகல அளவு மாற்றம் செய்திருந்தால் அதற்குரிய விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்ய அறிவுறுத்தினா்.