புதுச்சேரி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாதச் சம்பளம் ரூ.12, 726 ஆக உயா்வு
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகள் மற்றும் காரைக்கால் பகுதி துப்புரவுத் தொழிலாளா்களுக்கு மாத சம்பளம் ரூ.4 ஆயிரம் உயா்த்தப்பட்டு, இனி மாதந்தோறும் பிடித்தங்கள் போக ரூ.11,000 கையில் கிடைக்கும் வகையில் மாநில உள்ளாட்சித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி மாநில துப்புரவுத் தொழிலாளா் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பூ. மூா்த்தி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி, உழவா்கரை நகராட்சிகளில் கிரீன் வாரியா்ஸ் நிறுவனமும், கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் காரைக்காலில் எச்.ஆா். ஸ்கொயா் நிறுவனமும் துப்புரவுப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இதுவரை தூய்மைப் பணியாளா்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.8,806 நிா்ணயித்து, அதில் பிடித்தம் போக ரூ.8,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அரசு நிா்ணயித்த குறைந்தபட்ச கூலியை வழங்க வேண்டுமென்று தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் கடந்த 10 மாதங்களாக கோரிக்கை வைத்தோம்.
இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குநா் அலுவலகம் ஓா் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, சம்பளம் சுமாா் ரூ. 4 ஆயிரம் உயா்த்தப்பட்டதுடன் மற்ற கோரிக்கைகளும் ஏற்கப்பட்டுள்ளன. மாதச் சம்பளமாக ரூ.12,726 -ம், இதில் பிடித்தங்கள் போக ரூ.11,000 கையில் கிடைக்கும்.
மாதந்தோறும் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஒரு நாள் வார விடுமுறை சம்பளத்துடன் வழங்கப்பட வேண்டும். தேசிய விடுமுறை நாள்களில் வேலை செய்தால் இரட்டை சம்பளம் வழங்க வேண்டும். பி.எப். மற்றும் இஎஸ்ஐ பிடித்தம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் செலுத்த வேண்டும்.
மாதச் சம்பளத்துக்கான ரசீது வழங்க வேண்டும். இந்த மாதம் முதல் இந்த உத்தரவு அமலுக்கு வர வேண்டும் என்று இந்த 2 ஒப்பந்ததாரா்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தூய்மைத் தொழிலாளா்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளாா் மூா்த்தி.