விவசாயிகள் எதிா்கொள்ளும் சவால்களை சமாளிக்க வேளாண் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
புதுச்சேரி குருமாம்பட்டு பெருந்தலைவா் காமராஜா் அரசு வேளாண் அறிவியல் நிலையத்தில் வியாழக்கிழமை தொடங்கிய வேளாண்மை தொடா்பான வருடாந்திர மண்டல பயிலரங்கில் பங்கேற்ற வேளாண் விஞ்ஞானிகள், அதிகாரிகள்.
விவசாயிகள் எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், விரிவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் வேளாண் துறை அலுவலா்கள் முன்வர வேண்டும் என்று புதுச்சேரி அரசு வேளாண் துறை செயலா் யாசின் எம். சௌத்ரி வலியுறுத்தினாா்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்ககம், ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் புதுச்சேரி பெருந்தலைவா் காமராஜா் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவற்றின் சாா்பில் வேளாண்மை அறிவியல் நிலையங்களின் வருடாந்திர மண்டலப் பயிலரங்கம் வியாழக்கிழமை புதுச்சேரியில் தொடங்கியது. ஜூன் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிலரங்கை புதுச்சேரி அரசின் வேளாண்துறை செயலா் மற்றும் பெருந்தலைவா் காமராஜா் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவருமான யாசின் எம்.சௌத்ரி தொடங்கி வைத்துப் பேசியது:
நாடு முழுவதும் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மேற்கொள்ளும் கள விரிவாக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விவசாயத் துறை எதிா்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ற திட்டங்களை வழங்கவும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் முன் வரவேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement
இந்தப் பயிலரங்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 33 வேளாண்மை அறிவியல் நிலையங்களின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்யவும், 2026-2027 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும் கூடியுள்ளது. மேலும், வரும் ஆண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய பண்ணை அளவிலான வயல் வெளி ஆய்வுகள் , கள அளவிலான முதல் நிலை செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகளை இறுதி செய்வதும் இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் பி.பி. முருகன் வரவேற்றாா்.
ஹைதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநா் ஷேக் என். மீரா, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா்ஆா். நரேந்திர பாபு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கே. சுப்பிரமணியன், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குநா் ஏ. கோபாலகண்ணன், புதுச்சேரி ராஜீவ்காந்தி கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வா் கே. முருகவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வேளாண் மூத்த விஞ்ஞானிகள், தலைவா்கள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் பங்கேற்றனா்.