மேல்மலையனூரில் ஆடி அமாவாசை விழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவை முன்னிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவ விழாவை முன்னிட்டு, அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூர் கோயில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காவல் துறை, மின் துறை, போக்குவரத்து, உள்ளாட்சி துறை, மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் பேசியதாவது: கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பேரூராட்சி மூலம் குடி நீர் வசதி, தற்காலிகப் பேருந்து நிலையங்கள், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். போக்குவரத்துத் துறை மூலம் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும்.
மின் வாரியத்தின் மூலம் தேவையான கூடுதல் பணியாளர்கள், மருத்துவ குழு, அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 20 இடங்களில் ஊஞ்சல் உற்சவத்தைக் காண எல்.இ.டி. திரை அமைக்க வேண்டும். கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பிரகா, சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் ஜெமினி, செஞ்சி டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.