FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாகத் திகழ்கிறது காங்கிரஸ்: திருநாவுக்கரசர்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்வதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

Updated On : 7 ஜூன் 2018, 8:53 am IST
பகிர்:

தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் திகழ்வதாக அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
 விழுப்புரத்தில் காங்கிரஸ் மத்திய மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆர்.டி.வி.சீனிவாசகுமார் தலைமை வகித்தார். நகரத் தலைவர் என்.செல்வராஜ் வரவேற்றார்.
 கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் சிறப்புரையாற்றியதாவது:
 செஞ்சியைச் சேர்ந்த ஏழை தலித் மாணவி பிரதீபா ஓராண்டு காத்திருந்து நீட் தேர்வு எழுதியபோதும், அதில் ஏற்பட்ட தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது தற்கொலை அல்ல; மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்திய கொலை. இதற்கு அந்த அரசுகள் பொறுப்பேற்று, அந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடியை அபராதமாகச் செலுத்த வேண்டும். காங்கிரஸ் சார்பில் மாணவி பிரதீபாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.
 மறைந்த ஜெயலலிதாவைப் போல, எடப்பாடி பழனிசாமி அரசால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. ஆட்சி நடத்தவும் இந்த அரசுக்குத் தகுதியில்லை.
 ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இப்போது ஆலையை மூடிய அரசு, இதனை முன்பாகவே செய்திருந்தால் இந்த உயிரிழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் விதத்தில் இதுவரை 20 மாவட்டங்களில், கூட்டங்களை நடத்தி நிர்வாகிகளைச் சந்தித்து, அவர்களின் பணியை நேரில் ஆய்வு செய்து வருகிறோம். கட்சியில் தற்போது 35 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.
 இந்த எண்ணிக்கையை, காமராஜர் பிறந்த நாளுக்குள் 50 லட்சமாக உயர்த்த வேண்டும். தமிழகத்தில் வலுவான கட்சிகளாக திமுக, அதிமுக ஆகியவை திகழ்ந்தன. இதில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக மூன்று அணிகளாகப் பிரிந்து, வலுவிழந்துவிட்டது.
 இதனால், காங்கிரஸ் இரண்டாவது பெரிய கட்சியாகத் திகழ்கிறது. முதலில், இதை நமது கட்சியினர் நம்பிக்கையுடன் ஏற்க வேண்டும். 50 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோதும், கட்சி உயிரோட்டத்துடன் தொடர்ந்து வருகிறது.
 தமிழகத்தில் நடைபெறும் ஊழல் ஆட்சி, சொன்னதை செய்யாத மத்திய பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். விரைவில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைக்கு சேர்த்து தேர்தல் வர உள்ளது. தற்போது, பாஜக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.
 மோடி அலை ஓய்ந்து, ராகுல் அலை வீசத்தொடங்கிவிட்டது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸால் மட்டுமே முடியும். 3ஆவது, 4-ஆவது அணிகள் வர வாய்ப்பில்லை. விரைவில் ராகுல் பிரதமராவது உறுதி என்றார் திருநாவுக்கரசர்.
 முன்னாள் மாநிலச் செயலர் சிறுவை ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ யசோதா, முன்னாள் எம்பிக்கள் ராணி, விஸ்வநாதன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் வி.தயானந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் செ.சிவா, சி.சுரேஷ்ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச் செயலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments