FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி

செஞ்சி அருகே நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் புதன்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 7 ஜூன் 2018, 9:22 am IST
பகிர்:

செஞ்சி அருகே நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரதீபாவின் உடல் புதன்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால், மனமுடைந்து திங்கள்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
 இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவி பிரதீபாவின் உடல் புதன்கிழமை மாலை 6 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, மாணவி பிரதீபாவின் உடலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவர்கள் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.
 அஞ்சலி செலுத்திய பிறகு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 நீட் தேர்வு தமிழகத்தில் பலரை பலி கொண்டு வருகிறது. மாணவி பிரதீபா 1,125 மதிப்பெண் பெற்றும், விரும்பிய மருத்துவப் படிப்பை பெற முடியவில்லை. நீட் தேர்வு முறை ரத்து செய்யப்பட வேண்டும்.
 முத்தரசன்: நீட் தேர்வால் தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இரண்டாவது கொலை இது. மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள் காரணமாக, தற்கொலையை தூண்டுகிறார்கள். நீட் தேர்வு இல்லை என்றால் பிரதீபா மருத்துவராக இருந்திருப்பார். ஆனால், அவரால் மருத்துவராக முடியவில்லை. இதற்கு முழு பொறுப்பை மத்திய, மாநில அரசுகளே ஏற்க வேண்டும். இதுபோன்ற மரணங்கள் தொடர்வது நல்லதல்ல.
 சீமான்: கல்வி வர்த்தகமாகிவிட்டது. விரும்பியதை படிக்க முடியவில்லை. காதலில் தோல்வியடைந்துவிடலாம். வாழ்க்கையிலும் தோல்வி அடைந்துவிடலாம்.
 ஆனால், லட்சியத்தில் அடையும் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது ஒரு சமூகக் கொடுமை.
 நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற்றிருக்க வேண்டும் என்றார்.
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments