முகப்பு
செய்திகள்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி.

திரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர் நந்திகம் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா பிரவேட் லிமிடெட் பேனரில் எஸ். என் ரெட்டி மற்றும் லஷ்மி காந்த் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஒக்கடு மிகிலடு திரைப்படம் உலகம் முழுக்க நவம்பர் 10 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்படவிருக்கிறது என படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

அத்திரைப்படத்துக்கான முதல் டிரெய்லர் கடந்த ஆகஸ்டு மாதம் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட போது உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ ஆதரவாளர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்திற்கான இரண்டாவது டிரெய்லர் நேற்று நவம்பர் 1 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு உலகம் முழுவதுமுள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘அல்லூரி, பகத்சிங், ராஜகுரு, சுக தேவ் போன்றவர்களை எப்படி அழைப்பீர்கள்?
தீவிரவாதிகள் என்பீர்களா?  சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்பீர்களா?
எல்லா நாடுகளும் எங்களைத் தீவிரவாதிகள் என்கின்றன...
சுதந்திரத்துக்கான போராட்டத்தின் பெயர் தீவிரவாதமா?
நாங்கள் தீவிரவாதிகளா?
பிறகெதற்கு காலம் தாழ்த்துகிறீர்கள்?
உரக்க குரலெழுப்புங்கள்’

என்ற தன்னிலை விளக்கக் குமுறலுடன் விடுதலைப் புலிகளின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வீரியத்துடன் முன் வைக்கிறது முதலில் வெளிவந்த டிரெய்லருக்கான வீடியோ...

நவம்பர் 10 ஆம் தேதி இத்திரைப்படத்துக்கான வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது டிரெய்லருக்கான வீடியோ நேற்று வெளியாகியுள்ளது...

இத்திரைப்படத்தின் டிரெய்லர் காட்சிகள் இரண்டையும் வைத்துப் பார்க்கையில் படம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைக் கதையை உள்ளது உள்ளபடி படைத்து தமிழ் உணர்வாளர்களின் முன் வைப்பது மட்டுமன்றி பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் வீரப்போர் நெறிகளையும் அதற்கான காரண காரியங்களையும் நிகழ்கால இளைஞன் ஒருவனது பார்வையில் இன்றைய தலைமுறையின் முன் பேசுபொருளாக வைப்பதாகவே தோன்றுகிறது. 

இத்திரைப்படம் எந்த அளவுக்கு தத்ரூபமாகவும், நிஜமான அக்கறையோடும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்வை பதிவு செய்திருக்கிறது என்பது படம் வெளிவந்த பின் தெரியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.