முகப்பு
செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான சந்தேக மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் மறுப்பு!

5.1 அடி நீளமுள்ள குளியலறைத் தொட்டியில் 5.7 அடி உயரமுள்ள நபரொருவர் துரதிருஷ்டவசமாக விழுந்து மூழ்கி இறப்பதை எங்கனம் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்ளமுடியும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:04 AM
பகிர்:

துபாய் நட்சத்திர விடுதியொன்றில் குளியலறைத் தொட்டியில் மூழ்கி இறந்த நடிகை ஸ்ரீதேவியின் மர்ம மரணம் தொடர்பாக சந்தேக மனுவொன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த மனுவின் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜஸ்டிஸ் தீபக் மிஸ்ரா, ஜஸ்டிஸ் ஏ.எம். கான்வில்கர், ஜஸ்டிஸ் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான குழு நிராகரித்துள்ளது. 5.1 அடி நீளமுள்ள குளியலறைத் தொட்டியில் 5.7 அடி உயரமுள்ள நபரொருவர் துரதிருஷ்டவசமாக விழுந்து மூழ்கி இறப்பதை எங்கனம் சந்தேகத்திற்கிடமின்றி ஒப்புக் கொள்ளமுடியும் என இந்த மனுவில் மூத்த ஆலோசகரான விகாஷ் சிங் கேள்வி எழுப்பிய போதும் நீதிபதிகள் குழு அந்த மனுவை நிராகரித்துள்ளது.

மூத்த சட்ட ஆலோசகரான விகாஷ் சிங் தனது மனுவில், நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே துபாய் அரசால் இந்திய அரசுக்கு சமர்பிக்கப்பட்டவையே, அவை சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதில் மேலும் சந்தேகத்தைத் தூண்டுவனவாகவே இருப்பதால் ஸ்ரீதேவி மரண வழக்கில் சுதந்திரமாக இயங்கக்கூடிய ஒரு தனி ஏஜன்ஸி மூலம் மீண்டும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டதோடு, துபாயில் கடந்த ஃபிப்ரவரி மாதம் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரில் எடுக்கப்பட்டிருந்த இன்சூரன்ஸ் காப்புத்தொகை குறித்தும் தனது மனுவில் கோடிட்டுக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கில் மனுதாரரான சுனில் சிங் முதலில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சந்தேக மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றமும் மனு மீதான விசாரணையை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.