ஐமேக்ஸ் திரையரங்கில் முதல்முறையாக வெளியாகும் தமிழ்ப் படம் - பிகில்
கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம் அறிமுகமானது...
கடந்த 2015-ம் ஆண்டு, சென்னையில் ஐமேக்ஸ் திரையரங்கம் அறிமுகமானது. சென்னை வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமாஸின் லூக்ஸ் திரையரங்குகளில், ஐமேக்ஸ் என்கிற விசேஷத் திரைப்படத் தொழில்நுட்ப வசதியுடன் ஒரு புதிய திரையரங்கம் செயல்பட ஆரம்பித்தது. ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன், ஜேம்ஸ் பாண்ட் நடித்த ஸ்பெக்டர் படம் 2015, நவம்பர் 20 அன்று திரையிடப்பட்டது. சென்னைக்கு மற்றொரு ஐமேக்ஸ் திரையரங்கம் கடந்த வருடம் கிடைத்தது. வடபழனியில் உள்ள விஜயா ஃபாரம் மாலில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸின் பலாஸோ திரையரங்குகளில் ஒன்று, ஐமேக்ஸ் திரையரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் பலாஸோ ஐமேக்ஸ் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. அதில் முதல் படமாக Ant-Man: And The Wasp திரையிடப்பட்டது.
இந்நிலையில் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாகவுள்ள முதல் தமிழ்ப் படம் என்கிற பெருமையை விஜய் நடித்துள்ள பிகில் படம் பெற்றுள்ளது. வடபழனி பலாஸோவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்கில் நாளை முதல் பிகில் படம் திரையிடப்படவுள்ளது. பெரிய திரையரங்கில் காணும் அனுபவம் கிடைக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் இந்தத் திரையரங்கில் படத்தைக் காண மிகவும் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். இதனால் டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாகி வருகின்றன.
ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. நாளை வெளியாகிறது. பிகில் படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு 2 மணி நேரம் 58 நிமிடம் 59 நொடி என சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.