''இப்போ வரைக்கும் உனக்கு என்ன ஆச்சுனு தெரியல'': மறைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சித்ரா குறித்து பிரபலங்கள் உருக்கம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா இறந்து ஒரு வருடங்கள் ஆனதையொட்டி, பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் விஜே சித்ரா. கடந்த வருடம் இதே நாளில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து அவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவரது மறைவு குறித்து உருக்கமாக பிரபலங்கள் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சன் டிவி தொகுப்பாளர் தியா, சித்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமாகன பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், டிசம்பர் 9, 2020 மறக்க முடியாத நாள். அந்த நாளுடையத் தாக்கம் என் வாழ்வில் இன்று வரை தொடர்கிறது. அன்று காலை 6 மணிக்கு என்னோட நண்பனிடம் இருந்து எனது போனுக்கு அழைப்பு வருகிறது. போனை எடுப்பதற்கு முன்பே எனக்குள் ஒரு பதற்றம் ஏற்படுகிறது. ஏதோ தவறாக உணர்கிறேன். மிகுந்த தயக்கத்தோடு போனை எடுத்தேன்.
Advertisement
Advertisement
எந்த செய்தியைக் கேட்கக் கூடாது என்று மனம் பதட்டம் அடைந்ததோ அந்த செய்தியை நண்பன் கூறினான். என் கை கால்கள் நடுங்கின, என்னுடைய நடுக்கத்தைப் பார்த்து என் அப்பா அம்மா பதறிப் போனார்கள். இந்த செய்திப் பொய்யாக இருக்கணும்னு மனசு ஏங்குச்சு. என்ன பண்றதுனே தெரியல. செய்தி தொலைக்காட்சிகளில் கன்னத்தில் காயத்தோடு உயிரற்று நீ படுத்திருக்கும் காட்சியை பார்க்கும் போது, அன்று நான் ஓலமிட்ட அலறல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கையில் முதன் முதலாக சக வயதுடைய என் உயிர் தோழியின் மரணத்தின் வலியை உணர்கிறேன். இப்படி நடந்திருக்க கூடாது, இது உண்மையில்ல, இது நீ இல்லனு என்னென்னமோ சொல்லி என்னை சமாதானப்படுத்த மனசு முயற்சி செய்துக்கொண்டே இருந்துச்சு. உயிரற்ற உடலா நீ இருப்பதை நேரில் வந்துப் பார்க்க மனசுல தைரியமும் இல்ல, விருப்பமும் இல்ல.
தனியறையில் பைத்தியம் போல உன்னோட பெயரை சொல்லி சொல்லி உளறிக்கொண்டிருந்தேன். போகாத சித்து, வந்துடு சித்து, எங்களை ஏமாத்திடாத சித்து, சித்து சித்து சித்துனு அன்று நான் புலம்பிய புலம்பல் இன்று வரை தொடர்கிறது. உனக்கு இப்படி நடந்திருக்க கூடாதுடி. சாகுற வயசாடி இது. ஏன்டி சித்து உனக்கு இப்படி ஆச்சு. இப்போ வரைக்கும் உனக்கு என்ன ஆச்சுன்னு எங்களுக்கு தெரியலையேடி. உன்னோட எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வராதானு மனசு இன்னுமும் ஏங்குதடி என் செல்லமே. எல்லாத்தையுமே வேக வேகமா சாதிச்சிட்டு வேகமாவே போய்ட்டியேடி, அப்படி என்னடி அவசரம் உனக்கு. நா, நம்ம நண்பர்கள், அப்புறம் உன்னோட ரசிகர்கள் எல்லாரும் உன்ன அவ்ளோ மிஸ் பண்றோம் சித்து. என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.