இரவு விருந்தில் போதைப் பொருள்: விஜய் சேதுபதி பட நாயகி கைது
போதைப் பொருள் வழக்கில் சிரஞ்சீவியின் உறவினரும் நடிகையுமான நிஹாரிகா கைது செய்ப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஷாருக்கானின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில் மேலும் ஒரு பிரபலத்தின் மகள் போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியின் இரவு விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விடுதியை காவல்துறையினர் சோதனை செய்தபோது கொகைன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதையும் படிக்க | பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்த கார்த்தி: ''படம் முழுக்க... ''
Advertisement
Advertisement
இதனையடுத்து விருந்தில் கலந்துகொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாகபாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியின் மகன் மற்றும் பின்னணி பாடகர் ராகுல் சிப்லிகஞ்ச் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.
நிஹாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நிஹாரிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிஹாரிகாவின் தந்தை வெளியிட்டுள்ள விடியோவில் என் மகள் அந்த விடுதியில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.