400 பேருக்கு டிக்கெட் தொகையை திருப்பி அனுப்பிய ஏசிடிசி நிறுவனம்!
ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசைநிகழ்ச்சியில் நெரிசல் காரணமாக பங்கேற்க முடியாத ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையை திருப்பித் தரும் பணியை துவங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கிய ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் சென்னை மக்கள் திணறியது இணையத்தில் கடந்த இரண்டு நாள்களாக பேசு பொருளாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கமல் - 233 கதை இதுதானா?
இந்த சம்பவத்துக்கு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ‘ஏசிடிசி ஈவண்ட்ஸ்’ மன்னிப்பு கேட்டதுடன், நிகழ்ச்சியில் பங்கேற்காதவர்கள் டிக்கெட் நகலை பதிவிடுங்கள் என்று ஏ.ஆர்.ரஹ்மானும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே பல்வேறு தரப்பினர் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சில ரசிகர்கள் டிவிட்டரில், ‘இது அப்பட்டமான பண மோசடி, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மானும் துணையாக இருந்துள்ளார்’ எனக் கடுமையாக பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: ஏ.ஆர். ரஹ்மான் மன்னிப்புக் கேட்டார்! அரசு என்ன செய்யப் போகிறது?
இந்நிலையில், முதல்கட்டமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத 400 பேருக்கு டிக்கெட் தொகையை திரும்ப அளித்துள்ளதாக ஏசிடிசி ஈவண்ட்ஸ் தெரிவித்துள்ளது. 4000 பேர் டிக்கெட் நகலை மின்னஞ்சலில் அனுப்பிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.