6 வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வெளியாகும் ‘அண்டாவ காணோம்’ திரைப்படம்!
நடிகை ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் உருவாகியுள்ள அண்டாவ காணோம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஸ்ரேயா ரெட்டி சாமுராய் என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
தொடர்ந்து திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். திமிரு படத்தில் வில்லி வேடமேற்று ரசிகர்களை மிரட்டியிருப்பார். பிறகு விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வழக்கம்போல் இவரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். மாறாக கணவருடன் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.
பின்னர், ஸ்ரேயா ரெட்டி ஐந்தாண்டுகள் கழித்து 2018 முதல் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்து வருகிறார். அறிமுக இயக்குனர் வேல் கூறிய கதை அவருக்கு பிடித்துவிடவே அதில் நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக வேல் பணியாற்றியுள்ளார்.
லியோ விஷன் படத்தை தயாரிக்க இதனை ஜே.எஸ்கே. வெளியிடுகிறது. இந்தப் படத்திற்கு ‘அண்டாவ காணோம்’ என்கிற வித்தியாசமான தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். படத்தின் நாயகனாக நடிப்பவர் தீபக். தேனி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் கதை காணாமல் போன அண்டாவை சுற்றி பின்னப்பட்டுள்ளதாம்.
2018இல் எடுக்கப்பட்ட படம் பொருளாதார பிரச்னைகளால் தற்போதுதான் வெளியாகவிருக்கிறது. இந்த 6 ஆண்டுகளில் ஷ்ரேயா ரெட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டார். சுழல் இணையத் தொடர், சலார் படத்திலும் நடித்து தனக்கான மார்க்கெட்டினை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அண்டாவ காணோம் திரைப்படம் வரும் ஜூனில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.