மலையாளப் படத்தில் நாயகியான 'மகாநதி' சீரியல் நடிகை!
அரசு முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கத்தில் படித்துவந்த பார்த்திபா, முழு நேர நடிகையாக மாறியுள்ளார்.
மகாநதி தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை பார்த்திபா, மலையாளத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மலையாளத்தில் இதற்கு முன்பு ஒரு படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது கொண்டல் என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மலையாளத்தில் பெரும் பெற்றி அடைந்த ஆர்டிஎக்ஸ் படத்தில் நடித்த ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் 2023 ஜனவரி முதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் கங்கா என்ற முதன்மை பாத்திரத்தில் நடித்துவந்தவர் நடிகை பார்த்திபா. இத்தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.
பின்னர் அந்தத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவருக்கு பதிலாக நடிகை திவ்யா முதன்மை பாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.
அடிப்படையில் அரசு முதன்மைத் தேர்வுகளுக்குத் தயாராகும் நோக்கத்தில் படித்துவந்த பார்த்திபா, நடிகையாக பலரைக் கவர்ந்ததால் அடுத்தடுத்த வாய்ப்புகள் பார்த்திபாவுக்கு குவிந்து வருகின்றன. பார்த்திபாவின் தந்தையும் அரசுத் துறை பணியாளர். அவரைப் போன்று அரசுத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற இலக்கை சினிமாவுக்காக மாற்றியுள்ளார். தற்போது நடிப்பதில் மட்டுமே முழுக்க கவனம் செலுத்தி வருகிறார்.
திரைப்படத்தில் நடிப்பதற்காகவே மகாநதி தொடரிலிருந்து விலகினார். தற்போது அவருக்கு அந்த முடிவு கைகொடுத்துள்ளது. கொண்டல் என்ற மலையாளப் படத்தில் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இது அவருக்கு இரண்டாவது படம்.
இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தொடரில் நடித்து மலையாளத்தில் நாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ல பிரதீபாவுக்கு சின்னத்திரை ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.