முகப்பு
செய்திகள்

நடிகர் விஜயகாந்த் மகனை வைத்து படமெடுப்பேன்: சசிகுமார்

சண்முக பாண்டியன் குறித்து சசிகுமார்...

Updated On : 23 செப்டம்பர், 2024 at 10:14 AM
நடிகர்கள் சசிகுமார், சண்முக பாண்டியன்.
பகிர்:

நடிகர் சண்முக பாண்டியனை வைத்து புதிய படத்தை இயக்குவேன் என சசிகுமார் தெரிவித்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நந்தன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதற்கிடையே, நேர்காணலில் பங்குபெற்று பேசிய சசிகுமார், ”குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு வந்தபோது, இக்கதையை முதலில் இயக்கத் திட்டமிட்டிருந்தவர்கள் என்கிற முறையில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னேன். இருவரும் எனக்கு அனுமதி கொடுத்தனர்.

நாவலின் காப்புரிமையைப் பெற்றிருந்த பாலா அதை எனக்காகக் கொடுத்தார். இணையத் தொடராக எடுக்க நினைத்தோம். அதற்காக, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினேன். அவரும் ஒப்புக்கொண்டார். குற்றப்பரம்பரைக்காக முடியை நீளமாக வளர்த்தச் சொன்னேன். வளர்த்தினார். போட்டோஷூட் எடுத்தபோது விஜயகாந்த் சார் போன்றே இருந்தார். என் படப்பிடிப்பு தாமதமான சூழலில் அவரே வந்து படைத்தலைவன் படத்தில் நடிக்க ஒப்புதல் கேட்டார். சரி என்றேன்.

விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது என் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்திருக்க வேண்டியது. அது நடக்காமல் போய்விட்டது. அந்த வருத்தம் இன்றும் நீடிக்கிறது. குற்றப்பரம்பரையை இயக்குவேனோ இல்லையோ, நிச்சயம் சண்முக பாண்டியனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.