மனசெல்லாம் தொடரில் இருந்து விலகிய நாயகன்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் இருந்து நடிகர் ஜெய்பாலா விலகியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் இருந்து நடிகர் ஜெய்பாலா விலகியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றான மனசெல்லாம் தொடரில் இருந்து ஜெய்பாலா விலகவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், நடிகர் ஜெய்பாலாவே சமூக வலைதளத்தில் இது குறித்து அறிவித்துள்ளார்.
6 மாதங்களாக பழகிய நண்பர்களை விட்டுப் பிரிவது அத்தனை சுலபமல்ல எனக் குறிப்பிட்டு மேலும் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''இது கடினமான சூழல், மறக்க முடியாத 102 எபிஸோடுகள், கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஒன்றாக இருந்துவிட்டு தற்போது பிரிவது சுலபமல்ல. என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது அடி மனதில் இருந்து நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தின் ஒவ்வொரு தருணங்களும், பகிர்ந்துகொண்ட ஒவ்வொரு காட்சிகளும், அதனை படமாக்குவதற்குள் நடக்கும் சிரிப்பலைகளும் என அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை.
எனது இரண்டாவது வீடாக மாறிவிட்ட மனசெல்லாம் தொடரின் தளத்தை விட்டுப் பிரிவதும் குட் பை எனக் கூறுவதும் எளிதல்ல. ஆனால், வாழ்க்கை நகர்ந்துதான் ஆக வேண்டும். எனது இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் என்னை நம்பிய அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். அருள் என்ற பாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததை பெருமையாகக் கருதுகிறேன்.
எனது மதிப்புமிக்க ரசிகர்கள் மற்றும் அருள் பாத்திரத்தை நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு கொண்டாடிய என் உடன் பிறவா சகோதர, சகோதரிகள் - அனைவருக்கும் நன்றிகள்'' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
மனசெல்லாம் தொடர் 102 எபிஸோடுகளைத் தாண்டி, தற்போது விறுவிறுப்படைந்துள்ளதால், ஜெய்பாலாவுக்குப் பிறகு இந்த பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | 800 நாள்களை நிறைவு செய்த மதிய நேரத் தொடர்!