ரூ. 4200 கோடி! அதிக வசூலைக் கொடுத்த இந்திய இயக்குநர் இவர்தான்!
அதிக வசூலைப் பெற்றுக்கொடுத்த இயக்குநர்...
இந்திய சினிமாவில் அதிக வசூலைப் பெற்றுக்கொடுத்த இயக்குநர் யாரென்று தெரியுமா...
2000-க்குப் பின்பே இந்திய சினிமாவின் வளர்ச்சியும் வணிகமும் அதிகமாக இருந்தாலும் தனித்துவமான உருவாக்க முயற்சிகளும் பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படங்களும் 2010-க்குப் பின்பே அதிகரித்தன.
அதிலும் ஒவ்வொரு மொழித்திரைப்படங்களும் அங்கு வெற்றிபெற்ற பின் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வசூலை அள்ளிக்கொண்டிருந்தன. அந்த பாணியை பெரிதாக உடைத்தவர் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி. பாகுபலி என்கிற திரைப்படம் மூலம் பான் இந்தியா என்கிற விஷயத்தைக் கொண்டு வந்ததுடன் அனைத்து மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெற்று அதற்கான வணிக சாத்தியங்களையும் திறந்து வைத்தார்.
Advertisement
பாகுபலியின் அபாரமான வரவேற்புக்குப் பின்பே அனைத்து பெரிய பட்ஜெட் படங்களும் பான் இந்தியா என தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகத் தொடங்கின. அப்படி உருவான கேஜிஎஃப், புஷ்பா ஆகிய படங்கள் வசூலில் இந்தியளவில் மிரட்டின.
இன்று பான் இந்தியா என்பதைத் தாண்டி அட்லி, சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோர் பான் உலகம் என தங்களின் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகின்றனர். அட்லி நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ராக்கா என்கிற படத்தையும் சந்தீப் ரெட்டி நடிகர் பிரபாஸை வைத்து ஸ்பிரிட் படத்தையும் உலகளவில் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, விதையைப் போட்ட ராஜமௌலியும் சும்மா இல்லை! இவர், நடிகர் மகேஷ் பாபுவை வைத்து வாரணாசியை இயக்கி வருகிறார். ரூ. 1000 கோடி பொருள்செலவில் இந்தியாவின் மிக அதிக பட்ஜெட் திரைப்படமாக இது உருவாகி வருகிறது.
சரி, இதுவரை இந்திய சினிமாவில் அதிக வசூலைக் கொடுத்த இயக்குநர் யார்? அது எஸ். எஸ். ராஜமௌலிதான் என்கின்றன வசூல் தகவல்கள். இதுவரை 12 திரைப்படங்களை இயக்கியுள்ள ராஜமௌலி ரூ. 4200 கோடி வசூலைக் கொடுத்திருக்கிறாராம். இதில், பாகுபலி 1&2 மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் வசூல் பங்களிப்பே ரூ. 3800 கோடி வரை உள்ளது. இந்தியாவில் வேறெந்த இயக்குநரும் ராஜமௌலி செய்த வசூல் சாதனையைச் செய்யவில்லை என்பதால் இப்பட்டியலில் முதலிடத்தில் இவரே உள்ளார்.
இரண்டாவது இடத்தில் 3 படங்களை மட்டும் இயக்கிய ஆதித்ய தார் இடம்பெற்றுள்ளார். துரந்தர், துரந்தர் - 2 ஆகிய படங்களின் மூலம் இந்தியளவில் புகழடைந்ததுடன் இப்படங்களின் மூலமே ரூ. 3000 கோடி வரை வசூலித்துவிட்டார். இவரின் முதல்படமான உரி ரூ. 350 கோடி வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி மூன்றாவது இடத்தில் உள்ளார். 17 படங்களை (சென்னை எக்ஸ்பிரஸ் உள்பட) இயக்கியுள்ள இவர் ஒட்டுமொத்தமாக ரூ. 3000 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இவை இந்தாண்டு நிலவரம்.
அடுத்தாண்டு வாரணாசி, ராக்கா, ஸ்பிரிட் ஆகியவை இந்திய வணிகத்தை மாற்றியமைக்கும் என்றே தெரிவதால் புதிய பாய்ச்சலுக்கு இந்திய சினிமா தயாராகிக்கொண்டிருக்கிறது.