விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி!
ஜன நாயகன் இணையத்தில் வெளியானதுக்கு எதிர்ப்பு...
விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக சூர்யா, சிரஞ்சீவி உள்ளிட்டோர் பதிவிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னைகளால் பொங்கல் வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. பின், மறுதணிக்கை செய்யப்பட்டு மே மாத வெளியீடாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப். 9) இரவு சமூக வலைதளங்களில் இப்படத்தின் முதல் 5 நிமிடக் காட்சி வெளியானது.
தொடர்ந்து, முழுப்படமும் இணையத்தில் கசிந்து திரைத்துறையினர் முதற்கொண்டு பலரையும்அதிர்ச்சியடையச் செய்தது. மேலும், இப்படத்தைப் பகிர்வோர்கள் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்து வக்கீல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
Advertisement
இந்த நிலையில், தெலுங்கின் சூப்பர்ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி, "ஜன நாயகன் கசிந்த விஷயம் எனக்குள் ஆழமான கவலையை ஏற்படுத்துகிறது. சினிமா என்பது நம்பிக்கை, உழைப்பு, பலரின் கூட்டு கனவுகளால் ஆனது. இந்த மாதிரியான நிகழ்வுகள் திரைத்துறையிலுள்ள நம் அனைவரையும் பாதிக்கிறது. மேலும், நம்முடைய படைப்புகளைப் பாதுகாப்பது எவ்வளவு கடினம் என்பதையும் நினைவுறுத்துகிறது. இந்த இழப்பிற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும், நாம் அனைவரும் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் நிற்க வேண்டும். சினிமாவை காப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவிலிருந்தும் நிறைய எதிர்ப்புக்குரல் வந்துள்ளது. முக்கியமாக, நடிகர் சூர்யா, “இது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல. படக்குழுவின் கனவு இதனால் குறைந்திருக்கும். நான் அனைவரிடமும் தாழ்மையாகக் கேட்கிறேன். தயவு செய்து, இணையத்தில் கசிந்ததை யாரும் பார்க்கவும் பகிரவும் வேண்டாம். மேலும், அப்படம் குறித்து இங்கு உரையாடவும் வேண்டாம். அவர்களின் உழைப்பு மரியாதை கொடுங்கள். நான் என் நண்பர்களுக்காக உடன் நிற்பதுடன் இச்செயலைக் கண்டிக்கிறேன். இது மன்னிக்க முடியாதது” எனத் தெரிவித்துள்ளார்.