ஜன நாயகன் படத்தை காத்திருந்து திரையரங்கில் பாருங்கள்! சிவகார்த்திகேயன் வேண்டுகோள்!
ஜன நாயகன் திரைப்பட விவகாரத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வேண்டுகோள்...
ஜன நாயகன் திரைப்படம் வெளியிடும் வரை காத்திருந்து திரையரங்குகளில் அனைவரும் காண வேண்டும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எச். வினோத் இயக்கிய விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னை காரணமாக வெளியாகவில்லை.
தேர்தல் நிறைவடைந்தவுடன் மே மாதத்தில் திரையரங்குகளில் ஜன நாயகன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக மர்ம நபர்களால் இன்று அதிகாலை இணையத்தில் கசிந்துள்ளது.
Advertisement
இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படம் கசிந்தது தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் தெரிவித்திருப்பதாவது:
”ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கானோரின் ஆர்வம், ரத்தம் மற்றும் வியர்வையின் மூலம் உருவாக்கப்படுகிறது. தயவுசெய்து சட்டவிரோதமாக படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
திரையரங்கில் வெளியாகும் வரை பொறுத்திருந்து, திரையரங்குகளிலேயே படத்தைப் பார்வையிடுங்கள்.
திறமைகளையும், கடின உழைப்பையும், திரையுலகத்தையும் மதியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.