ஆன்மிக தொடரில் களமிறங்கிய பிரியங்கா நல்காரி! போஸ்டர் வெளியானது!
ரோஜா, சீதா ராமன் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி ஆன்மிக தொடரில் நடிக்கவுள்ளது குறித்து...
ரோஜா, சீதா ராமன் உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி ஆன்மிக தொடரில் நடிக்கவுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரியங்கா நல்காரி. ரோஜா தொடர் சின்னத் திரை டிஆர்பி பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தது.
இதற்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன் தொடரில்நாயகியாக பிரியங்கா நடித்து கவனம் ஈர்த்தார்.
Advertisement
இதனிடையே தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடிப்பதற்காக சீதா ராமன் தொடரில் இருந்து விலகினார். இதன் பிறகு காதலரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டிலேயே தங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் சின்ன திரையில் களமிறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நளதமயந்தி தொடரில் நாயகியாக நடித்து மீண்டும் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார். பின்னர் ரோஜா -2 தொடரில் நியாஸ் கான் உடன் நடித்திருந்தார். இந்தத் தொடருக்குப் பிறகு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்ட பிரியங்கா தற்போது ஆன்மிக தொடரில் நடிக்கவுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி தொடரில் மங்கா என்ற பாத்திரத்தில் பிரியங்கா நடிக்கவுள்ளார். இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
கெளரி தொடரில், கெளரியாக சம்யுக்தாவும் நரேஷ் ஈஸ்வர் அசோக் பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த சுஜிதா சிறப்புத் தோற்றத்தில் அம்மனாக நடிக்கிறார்.
தற்போது முன்னணி நாயகியான பிரியங்கா நல்காரியும் கெளரி தொடரில் இணைந்துள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.