கொடைக்கானல் அனுபவங்களைப் பகிர்ந்த அழகே அழகு நாயகன்!
அழகே அழகு தொடரின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்த நாயகன் குணா குமரன்....
அழகே அழகு தொடரில் நாயகனாக நடித்துவரும் நடிகர் குணா குமரன், தனது கொடைக்கானல் படப்பிடிப்பு அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து கோடையில் எனது அழகான அழகே அழகு குடும்பம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
Advertisement
செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி குறிஞ்சி நாதன், மதன் குமார், சுனிதா உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் இத்தொடருக்கு வலு சேர்த்துள்ளது. அன்றாடம் நம் குடும்பத்தில் சந்திக்கும் கதாபாத்திரங்களை வைத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பலராலும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அழகே அழகு தொடர் உள்ளது.
வெறும் நடிகர்களுக்காக தொடரை எடுக்காமல், நடிகர்களை பாத்திரத்தில் ஒன்றவைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மாமியார் வீட்டில் மருமகள்களுக்கு எதிராக சகஜமாக நடக்கும் விஷயங்களை கேள்வி கேட்கும் பல காட்சிகள் இத்தொடரில் இடம்பெறுகின்றன. இதனால், இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் இத்தொடர் கவர்ந்துள்ளது.
தற்போது இந்தத் தொடரின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட படங்களை நாயகன் குணா குமரன் பகிர்ந்துள்ளார்.
குடும்பத்தின் பொருளாதார சூழலுக்காக கடுமையாக உழைக்கும் சுரேஷ் என்ற வெள்ளந்தியான பாத்திரத்தில் குணா நடித்து வருகிறார். இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.