வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை மாற்றிவிடுவேன்: கிஷோர்
பிரதமர் மோடி குறித்து கிஷோர்....
வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன் என நடிகர் கிஷோர் சொன்னது வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைத்துறையில் முக்கியமான நடிகராக இருப்பவர் கிஷோர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர், ஆடுகளம் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.
ஹரிதாஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தொடர்ந்து, விசாரணை, வடசென்னை என வெற்றி மாறன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.
Advertisement
Advertisement
தற்போது, இவர் நடிப்பில் உருவான மெல்லிசை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேர்காணலின் போது, ‘கால எந்திரம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? எனக் கேட்கப்பட்டது.
அதற்கு கிஷோர், “அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் 2014-க்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்போது, நாட்டில் வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே சென்றால், இதனை மாற்ற பல ஆண்டுகள் ஆகும். அன்பு இல்லையென்றால் எதுவும் இருக்காது” என அதிரடியாக பதிலளித்துள்ளார். கிஷோரின் இக்கருத்தைப் பலரும் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.