தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!
பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியானது தொடர்பாக...
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.
ஹிந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியைப் பேசும் படமாக திரைக்கு வந்த இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும், ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
Advertisement
Advertisement
சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த பராசக்தி திரைப்படம், கடந்த பிப். 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.
பராசக்தி படம் ஓடிடியில் வெளியாகி குறைந்த நேரத்திலேயே 1 கோடி நிமிட பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்த நிலையில், பராசக்தி படத்தின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பு வெளியான நிலையில், தற்போது தணிக்கை செய்யப்படாத அசல் பதிப்பு வெளியாகியுள்ளது.
அறிஞர் அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க “அச்சம் இருக்கும் வரையில் இங்கு யார் ஆண்டாலும் அண்ணா துரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” எனும் உரை பராசக்தி படத்தில் வசனமாக இடம்பெற்றிருந்த நிலையில் அதைத் தணிக்கை வாரியம் நீக்கியது.
அதேபோல, அண்ணாவின் புகழ்பெற்ற முழக்கமான 'தீ பரவட்டும்' என்ற வசனம் மாற்றப்பட்டு 'நீதி பரவட்டும்' எனவும், 'சிறுக்கி', 'கொடில காய வச்ச துணி மாதிரி' என்ற வார்த்தைகள் மௌனமாக்கி தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.