பாரதி கண்ணம்மா தொடரில் நடித்துப் புகழ் பெற்ற ரோஷினி ஹரிப்ரியனிக்கு இன்று (பிப். 15) திருமணம் நடைபெற்றுள்ளது.
எளிமையான முறையில் குடும்பத்தார், நண்பர்கள் பங்கேற்க திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் குறித்த எந்தவொரு தகவலையும் ரசிகர்களுடன் ரோஷினி ஹரிப்ரியன் பகிராத நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் பகிர்ந்துள்ள புகைப்படங்கள், விடியோக்கள் மூலம் ரோஷினிக்கு திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ரோஷினி திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்து சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து,குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 வது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் குவிந்தன. சசிகுமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மெட்ராஸ் மேட்னி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 2025 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதியின் தங்கையாக ராகவர்த்தினி என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், ரோஷினிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி கே.எஸை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
பொம்மை நாயகி, பெருசு, கையும் களவும், தண்டட்டி, பிகினிங், ஐரா உள்ளிட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக இவர் பணியாற்றியுள்ளார்.
ரோஷினி ஹரிப்ரியன் - சுந்தரமூர்த்தி திருமணத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் பிரபலங்கள் அருண் பிரசாத், காவ்யா அறிவுமணி, ஃபாரீனா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை இவர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.