டிராகன் - 2 அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்!
டிராகன் 2வது பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரதீப் ரங்கநாதன்.
டிராகன் படத்தின் 2வது பாகம் குறித்த அறிவிப்பை இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில், ‘கோமாளி’ மற்றும் ‘லவ் டுடே’ ஆகிய படங்களின் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து உருவான ‘டிராகன்’ திரைப்படம் கடந்தாண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பிரதீப் மற்றும் அஷ்வத் இணைந்து எழுதி அவர்களது கூட்டணியில் ரூ.37 கோடியில் உருவான இந்தப் படம் வெளியான 10 நாள்களில் ரூ.100 கோடி வசூல் செய்து மிகப் பெரியளவிலான வெற்றியடைந்தது.
Advertisement
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்தத் திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். மேலும், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில் படத்தின் பாடல்களும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்திருந்தது.
‘டிராகன்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியான போதிலும் திரையரங்குகளில் 50-வது நாள்களைக் கடந்து ஓடி வெற்றிப் பெற்றது.
டிராகன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், டிராகன் படத்தின் 2வது பாகம் குறித்த அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “நண்பனாக இருந்து இயக்குநராக மாறுவதற்கு எனக்கு சிறிது நேரம் பிடித்தது. ஆனால், இப்போது இரண்டிலும் சிறந்ததை நான் பெற்றுள்ளேன். விரைவில்...” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிராகன் திரைப்படத்தின் 2 வது பாகம் விரைவில் உருவாகவுள்ளதை புகைப்படம் வெளியிட்டு பிரதீப் ரங்கநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.