முதல்வர் பதவி.. புடவையில் காதலி.. முதல் வரிசை.. வைரலாகும் கேரள நடிகரின் சர்ச்சைப் பேச்சு!
முதல்வர் விஜய், த்ரிஷாவை மலையாள நடிகர் மறைமுகமாக விமர்சித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் மறைமுகமாக விமர்சித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகரும் இயக்குநருமான தியான் ஸ்ரீனிவாசன், சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்திருந்தாலும், நேர்காணல்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நகைச்சுவையான பேச்சுக்களுக்காக அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம்.
இந்த நிலையில், அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் விசிட்டர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசிய விடியோ வைரலாகி தமிழ்நாடு வரை வந்திருக்கிறது.
Advertisement
Advertisement
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“கடந்த சில நாள்களாக நான் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் கவனம் செலுத்தி வருகின்றேன். அப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வரானார். அப்போது, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நானும் முதலமைச்சராக வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அந்தச் வேளையில், அஜு வர்கீஸ் என்னை அழைத்து, முதலில் முதலமைச்சராக முயற்சிக்காதீர்கள்; அம்மா (AMMA) சங்கத்தின் தலைவராவதன் மூலம் முதல் அடியை எடுத்து வையுங்கள் என்று கூறினார். சமூக சேவைகள் செய்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற பிறகு, முதலமைச்சராகலாம் என்று ஆலோசனை கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக நவ்யா மீதான காதலை ஒரு நேர்காணலின்போது வெளிப்படுத்தினேன். அதன்பிறகு அவருக்கு திருமணமாகி, திருமண வயதில் மகனும் உள்ளார். தற்போது நாங்கள் மீண்டும் படத்தில் இணைந்துள்ளோம்.
நான் முதல்வராகப் பதவியேற்கும்போது முதல் வரிசையில் சேலை அணிந்து நவ்யா அமர வேண்டும் என விரும்புகிறேன். ஆனந்தக் கண்ணீருடன் அவர் பங்கேற்பார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, கீழே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நவ்யா நாயர், அதனைக் கேட்டு பலமாக சிரித்தார்.
பிறகு மேடையில் ஏறி, தியான் ஸ்ரீனிவாசனின் பேச்சுக்கு பதிலளித்த நவ்யா, “நீங்கள் முதல்வராகும்போது பச்சை பார்டர் கொண்ட வெள்ளை சேலை, வைர நெக்லஸ் அணிந்து முதல் வரிசையில் அமர்வேன். கண்களில் ஆனந்த கண்ணீருடன் உங்கள் பெயரை கோஷமிடுவேன். முதல் வரிசையில் எனக்கு இருக்கை ஒதுக்குங்கள்” என்றார்.
மேலும், இந்த நிகழ்வில் பேசிய நடிகர் அஜு வர்கீஸ், “இனி தமிழ்நாட்டுக்குள் என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. முதல்வர் விஜய் சார், என் நண்பனுக்கு பைத்தியம் பிடித்துள்ளது. என்னால் எதுவும் பண்ண முடியவில்லை. மன்னித்து விடுங்கள்” என்றார்.
இந்த நிகழ்வில், த்ரிஷாவின் பெயரை நடிகர் தியான் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவையே அவர் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Malayalam actor Dhyan Sreenivasan has sparked controversy by indirectly criticizing TN CM C. Joseph Vijay and actress Trisha.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.