ரஜினி - 173 வாய்ப்பு கிடைக்காதது ஏன்? அஷ்வத் மாரிமுத்து பதில்!
ரஜினியுடனான சந்திப்பு குறித்து அஷ்வத் மாரிமுத்து...
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கிய டிராகன் திரைப்படம் ரூ. 150 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தற்போது, நடிகர் சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனை, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, நாயகியாக மிருணாள் தாக்குர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய அஷ்வத் மாரிமுத்துவிடம் நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை இயக்க நடந்த பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு அஷ்வத், “நடிகர் ரஜினிகாந்துக்கு கதை சொல்ல சென்றபோது திடீரென ஒரு பிரபல அரசியல்வாதி அவரைச் சந்திக்க வந்தார். என்னிடம் வந்த ரஜினி, ‘மன்னித்துவிடுங்கள். திடீரென அவர் வந்துவிட்டார். 20 நிமிடம் காத்திருக்க முடியுமா?” எனக் கேட்டார். அவர் நினைத்திருந்தால் 10 நாள் கழித்து கூட வர சொல்லியிருக்கலாம். ஆனால், என்னிடம் அவர் நடந்துகொண்டது உண்மையில் ஆச்சரியப்படுத்தியது.
தலைவர் - 173 திரைப்படத்திற்காக நான் அவருக்கு 1.45 மணிநேரம் கதை சொன்னேன். இடைவேளைக் காட்சி சுவாரஸ்யமாக இருந்ததால் சாப்பிடக்கூட செல்லாமல் ஆர்வமாகக் கேட்டார். அவருக்கு கதை பிடித்திருந்தது.
ஆனால், வேறு சில காரணங்களால் இப்படம் அமையாமல் போய்விட்டது. கண்டிப்பாக, நடிகர்கள் ரஜினிகாந்த் அல்லது கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.