வெறுப்பு பிரசாரம்..! துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்!
இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தை விமர்சித்தது குறித்து...
இயக்குநர் வெற்றிமாறன் துரந்தர் படத்தினை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். நீளிரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மறைமுகமாக துரந்தர் படத்தினை விமர்சித்துள்ளார்.
ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில், நவீன் சந்திரா நடிப்பில், சோமிதரண் இயக்கத்தில் நீளிரா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித், நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. நேற்று வெளியான இந்தப் பட டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது. இந்தப் பட விழாவில் வெற்றிமாறன் பேசியிருப்பதாவது:
நீளிரா திரைப்படம் வெறுப்பையோ வன்முறையையோ விற்கவில்லை. கோடிக்கணக்கில் பணம் செலவிடப்பட்டு, வெறுப்பை பிரசாரம் செய்து பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. போரில் ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்க்கும் உணர்வைத் தருகிறது.
இந்தக் காலத்தில் எல்லாமே பிரசாரமாக மாறுகிறது. இந்த பிரசாரம் நமது நினைவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பண மதிப்பிழப்பின்போது வரிசையில் நின்று யார் இறந்துபோனார்கள் என்று நமக்குத் தெரியும். அதனால் யார் பாதிப்படைந்தார்கள் என்றும் நமக்குத் தெரியும். ஆனால், இந்தப் பாதிப்பை எளிமையாக மாற்றிவிட முடிகிறது.
இந்தமாதிரி நேரங்களில் நாம் வெறுப்பு பிரசாரத்துக்கு எதிராக நல்ல படங்களை எடுக்க வேண்டும். இந்தப் படம் வெற்றியடையும் ; வெற்றியடைய வேண்டுமென நினைக்கிறேன். தொடர்ந்து இந்த மாதிரி படங்களை இயக்குநர் எடுக்க வேண்டும் என்றார்.
ஆதித்யா தார் இயக்கிய துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தில் பண மதிப்பிழப்பை சரியெனக் கூறியிருந்தது. இதுவரை ரூ.1,088 கோடி வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.