தமிழ்ப் படங்கள் எனக்கு பைபிள் மாதிரி... நானியின் உற்சாகமான பேச்சு!
'தி பாரடைஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் நானி பேசியிருப்பதாவது...
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “தமிழ்ப் படங்கள் எனக்கு பைபிள் மாதிரி” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படத்தில் நானி, கயாது லோஹர், ராகவ் ஜூயால், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சம்பூர்ணேஷ் பாபு, தணிகல பரணி, ராஜா ரவீந்திரா, ராம் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு தோற்றத்தில் தோன்றி, ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சி. ஹெச். சாய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
Advertisement
Advertisement
மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார்.
வருகிற செப்.24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக எதிர்வரும் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்தப்ப டத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேக நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகர் நானி பேசியிருப்பதாவது:
தி பாரடைஸ் திரைப்படம் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நான் நல்ல நடிகரா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், எனக்கு ஒரு விசயம் மட்டும் தெரியும். நான் உங்களைப் போன்ற ஒரு நல்லதொரு பார்வையாளன்.
ஒரு பார்வையாளராக மாஸான திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அது போன்றதொரு திரைப்படங்கள் வெளியாவது குறைவு. அப்படி ஒரு பிரம்மாண்டமான மாஸான திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் திரைப்படம்தான் 'தி பாரடைஸ்'.
ஒவ்வொரு ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இது போன்றதொரு மாஸான திரைப்படம் அவசியம் தேவை. இந்தப் படம் அப்படிப்பட்டதொரு திரைப்படம். இதை நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன். இதனை நீங்கள் 24 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து, இந்தப் படத்தை பார்த்த பிறகு சொல்வீர்கள்.
இந்தப் படத்தில் அழுத்தமான எமோஷன்களை பற்றிப் பேசி இருக்கிறோம். அதே தருணத்தில் திரையரங்குகளில் பார்த்து ரசிக்கும் அற்புதமான அனுபவங்களையும் வழங்கி இருக்கிறோம்.
தமிழ்த் திரைப்படங்கள் எனக்கு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவிற்கும், என்னுடைய சினிமா மீதான ஆர்வத்திற்கும், என்னுடைய சினிமா மீதான காதலுக்கும், சினிமா மீது பிரியம் வந்ததற்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள்தான் உத்வேகம். அதிலும் கமல்ஹாசன்- மணிரத்னம்- பாக்கியராஜ்- பாரதிராஜா- என பல சாதனையாளர்களைக் குறிப்பிடலாம்.
நான் ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வருகைத்தரும் போதெல்லாம் என்னுடைய திரை குடும்பத்திற்கு வந்தது போன்று உணர்வு எழும். எனக்கும் கடந்த காலத்தில் சென்னைக்கும், தமிழ்நாட்டிற்கும் நிறைய தொடர்பு உண்டு. என் மீது தமிழ் ரசிகர்கள் மட்டும் அன்பும் அதிகம். அதனை நான் பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன்.
நான் என்னுடைய படத்திற்கு தமிழில் பின்னணி குரலில் பேசுவதற்கு தமிழ் ரசிகர்கள் மீதான பேரன்புதான் காரணம். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் 'தி பாரடைஸ்'. என்னுடைய திரையுலக பயணத்தில் நான் பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் திரைப்படமும் இதுதான்.
நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன் 24ஆம் தேதி திரையரங்குகளில் உங்களுக்காக தரமான சம்பவம் காத்திருக்கிறது.
அடுத்த முறை நான் என்னுடைய படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக சென்னைக்கு வரும்போது, ரசிகர்கள் அனைவரும் என்னை 'தி பாரடைஸ்' படத்தில் நடித்திருக்கும் 'ஜடல்' என்ற கேரக்டர் பெயரை சொல்லித்தான் அழைப்பீர்கள்'' என்றார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா- நடிகர் நானி ஆகியோர் பதிலளித்தனர். அத்துடன் சென்னையில் உள்ள நானியின் ரசிகர்களுக்காக 'தி பாரடைஸ்' படத்திற்கான பிரத்யேக காட்சிக்குரிய முதல் டிக்கெட்டையும் நானி அறிமுகப்படுத்தினார்.
Tamil films are like the Bible to me... Nani's enthusiastic words!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.