FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?

ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு அளிக்க கோரிக்கைகள் வரும் நிலையில் ஜேஇஇ நிர்வாகம் பதில்.

Updated On : 6 ஜூன் 2026, 11:58 am IST
ஐஐடி தில்லி - file photo
பகிர்:

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஐஐடி சேர்க்கைத் தகுதி தொடர்பான அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐஐடி சேர்க்கைக்கான கலந்தாய்வில், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பதிவிடுவதில், ஒருமுறை தளர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், ஒருங்கிணைந்த சேர்க்கை வாரியத்தின் (JAB) தலைவரான ஐஐடி ரூர்க்கியின் இயக்குநர் கமல் கிஷோர் பந்த், ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு திரையில் மதிப்பெண் வழங்கும் (OSM) முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டுச் செயல்பாட்டில் ஏற்படும் தாமதங்கள் குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே பெரும் குழப்பம் நீடித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

Advertisement

Advertisement

ஏற்கனவே JEE (Advanced) தேர்வில் தேர்ச்சி பெற்று, மறுபக்கம் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்திருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதன் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களது ஐஐடி சேர்க்கை வாய்ப்பு குறித்து கவலை அடைந்திருக்கிறார்கள்.

ஜேஒஎஸ்ஏஏ கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கிய நிலையில், ஐஐடி சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் வகையில் திருத்தப்பட்ட மதிப்பெண்கள் சரியான நேரத்தில் வந்து சேருமா என்பது குறித்து உறுதி செய்யப்படாததால், மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே, நடப்பு ஆண்டின் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தகுதி அளவுகோல்களில் ஒரு குறிப்பிட்ட தளர்வை அளிக்குமாறு மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஐஐடி சேர்க்கை வாரியம் கொடுத்திருக்கும் விளக்கத்தில், பல்வேறு கல்வி வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது, அடிப்படைத் தகுதிக்கான நிபந்தனைகளில் ஒரு குறிப்பிட்ட வாரிய மாணவர்களுக்கு தளர்வு அளிப்பது என்பது சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

தற்போதிருக்கும் விதிமுறைகள் முன்கூட்டியே தெளிவாக வெளியிடப்பட்டது. நாட்டில் உள்ள 36 வகையான கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்கள் ஐஐடி சேர்க்கைக்கு விண்ணப்பித்திருகும்போது, ஒரு குறிப்பிட்ட வாரிய மாணவர்களுக்கு தளர்வு அளிக்க முடியாது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு தேர்ச்சி பெற்ற சிபிஎஸ்இ மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 1ஆம் தேதி ரூர்கி ஐஐடி இயக்குநர் பந்த் பேசுகையில், அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போதைய 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சதவீத நிலையைப் பொருட்படுத்தாமல். ஜேஓஎஸ்ஏஏ கலந்தாய்வில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 4.6 சதவிகிதம் அதிகமாகும். இதில் 46,773 பேர் மாணவர்கள்,இ 10,107 பேர் மாணவிகள். இதுவரை இந்த அளவுக்கு மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

இவர்கள் நாட்டில் உள்ள 23 ஐஐடிகளின் 18,951 பிடெக் இடங்களுக்கானக் கலந்தாய்வில் பங்கேற்பார்கள். இவர்கள் 12ஆம் வகுப்பில் குறைந்தது 75 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

summary

CBSE score relaxation for IIT admissions: What does the JEE administration say?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments