எல்டிஎஃப் ஊழல்மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும்: பிரியங்கா காந்தி
எல்டிஎஃப் ஊழல்மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும் என பிரியங்கா காந்தி விமர்சித்தது குறித்து...
இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) அரசு ஊழல்மிகுந்தது என்பது குழந்தைக்குக்கூட தெரியும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளம், கல்பெட்டாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, “இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.) அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படுவதைவிட, பெருநிறுவனங்களுக்காக செயல்படும், முற்றிலும் ஊழல் மிகுந்த அரசாங்கமாக மாறிவிட்டது. இதை கேரளத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தெளிவாக புரிந்துகொள்ளும்.
Advertisement
வயநாடு மக்களவை உறுப்பினராகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, உங்களில் பலரை முடிந்தவரை சந்திக்கவும், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளேன்.
நிச்சயமாக, இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இருப்பினும், நான் மக்களுடன் தொடர்ந்து கலந்துரையாடி, இந்தக் கவலைகளைப் புரிந்துகொள்ளும்போது, எல்.டி.எஃப். அரசாங்கத்தின் கடந்த பத்தாண்டுகளில் உங்கள் பிரச்னைகள் அதிகரித்துள்ளன என்பதை என்னால் காணமுடிகிறது” எனத் தெரிவித்தார்.
கேரளத்தில் தேர்தல் பிரசாரத்துக்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.