காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்!
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வேதனையளிப்பதாக அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது வேதனை அளிப்பதாக, அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மொத்தம் 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி, வெற்றி வாய்ப்புள்ள பலருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.
Advertisement
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில ஆண்டுகளே ஆன, களத்தில் அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ, தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு. இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு” எனக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.