மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதைப் பற்றி...
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான் என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்றவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மிகத் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியும் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி.
Advertisement
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “2021 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், குலவிளக்குத் திட்டத்தில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ரூ. 1,500 வழங்கப்படும் என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.
நாங்கள் உங்களது தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து வெளியிடவில்லை. நீங்கள்தான் எங்களுடைய தேர்தல் அறிக்கையைக் காப்பி அடித்து வெளியிட்டிருக்கிறீர்கள். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றதும் அனைவரும் ரூ. 1,000-ஐ வழங்கிவிட்டாரா?
சுமார் 28 மாதங்கள் கழித்துத்தான் அனைவருக்கும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நானும், என்னுடன் இருந்த சட்டப்பேரவையில் சக உறுப்பினர்களும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்.
நீங்கள் ஏழை மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இரண்டு ஆண்டுகள் அனைவரையும் காக்க வைத்தீர்கள். நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து உரிமைத் தொகையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறோம். உரிமைத் தொகையைப் பெற்றுத் தந்தது அதிமுகதான்.
இவ்வளவுகாலம் மக்களைப் பார்க்காமல், தேர்தல் நேரத்தில் அவருக்கு இந்த மக்களின் வாக்குகள் தேவை என்பதால் அவர்கள் உரிமைத் தொகை வழங்கியிருக்கின்றனர்” என்றார்.
AIADMK General Secretary and Leader of the Opposition, Edappadi Palaniswami, has stated that it was the AIADMK that secured the Magalir Urimai Thogai Scheme.
இதையும் படிக்க... விஜய் சென்ற தனி விமானத்தில் பறக்கும் படையினர் சோதனை!