காரைக்குடி: வேனிலிருந்து இறங்கி சைக்கிள் ஓட்டிய விஜய்!
வேனிலிருந்து இறங்கி விஜய் சைக்கிள் ஓட்டியது பற்றி...
காரைக்குடிக்கு தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் வழியில் வேனில் இருந்து இறங்கிய தவெக தலைவர் விஜய், சிறிது தூரம் சைக்கிளில் சென்றார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய், தமிழ்நாடு சட்டபேரவைத் தோ்தலையொட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்காலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்.
Advertisement
வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருக்கும் நிலையில், 4 மணிநேரத்துக்கு மேலாக விஜய் பயணித்து வருகிறார்.
காரைக்குடியை நெருங்கிய நிலையில், திடீரென்று பிரசார வேனைவிட்டு இறங்கிய விஜய், சிறிது தூரம் மாலை அணிந்தபடி சைக்கிள் ஓட்டிச் சென்றார்.
ஆனால், தொண்டர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், விஜய்யால் தொடர்ந்து சைக்கிளில் செல்ல முடியவில்லை. இதனால் மீண்டும் பிரசார வாகனத்தில் ஏறி மக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.
காரைக்குடி காவல்துறையினர் விஜய் பிரசாரத்துக்கு பகல் 12 மணிமுதல் 2.30 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளனர்.
தற்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து பிரசாரம் திடலுக்கு வர முடியாமல் மக்கள் கூட்டத்தில் விஜய் திணறி வருகிறார்.
மறுபுறம், பிரசாரம் நடைபெறும் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் பல மணிநேரமாக வெய்யிலில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.