திமுக - தவெக இடையே கைகலப்பு! மூவர் மருத்துவமனையில் அனுமதி!
கும்பகோணத்தில் திமுக - தவெக இடையே கைகலப்பு ஏற்பட்டது பற்றி...
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் திமுக - தவெகவினர் இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிக் கொள்ள ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கும்பகோணத்தில் திமுக சார்பில் நான்காவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாக தூக்கம்பாளையம் தெருவில் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
அப்போது, வாக்காளர்களுக்கு ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்பட்டு, தவெகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று திமுகவினர் பிரசாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவலறிந்த தவெகவினர் சம்பவ இடத்துக்குச் சென்று திமுகவினர் வைத்திருந்த ரூ. 8,000 மதிப்பிலான கூப்பன்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதில், திமுக - தவெகவினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது, மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், தவெக மாவட்டச் செயலாளரின் ஆதரவாளரான சந்திரன் மற்றும் நிர்வாகிகளை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க செயினை அறுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திமுக துணை மேயரை உடனடியாகக் கைது செய்யக் கோரி, காந்தி பூங்கா முன்பு தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.