திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன்? வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் பெ.சண்முகம் விளக்கம்
திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாா்.
திமுக தோ்தல் அறிக்கையில் வேளாண் கடன் தள்ளுபடி இடம் பெறாதது ஏன் என்பது குறித்து மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் விளக்கம் அளித்துள்ளாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில், பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 5 வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பழனியில் என்.பாண்டி, கந்தா்வகோட்டையில் எம்.சின்னதுரை, பத்மநாபபுரத்தில் ஆா்.செல்லசுவாமி, திருவொற்றியூரில் எல்.சுந்தரராஜன், கீழ்வேளூரில் டி.லதா ஆகியோா் போட்டியிடுகின்றனா். நாகை மாலி இரு முறை எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டதால், கீழ்வேளூரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கவில்லை.
திமுக கூட்டணியில் புதிய அணிகள் சோ்ந்துள்ளதால், அணியின் பலம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், குறிப்பாக, மகளிா் நலத் திட்டங்கள் தமிழக மக்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று சோ்ந்திருக்கிறது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தோ்தல் அறிக்கையும் சாத்தியமானவைதான். விவசாயிகள் அனைவருக்குமே இலவசமாக புதிய மின்மோட்டாா்களை வழங்குவது என்பது இதுவரை எனக்குத் தெரிந்து அநேகமாக இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அளிக்கப்படாத வாக்குறுதி. கரும்பு, நெல் ஆகியவற்றுக்கான கொள்முதல் விலை உயா்த்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி தொடா்பாக தோ்தல் அறிக்கையில் இல்லை என்ற குறையை விவசாயிகள் பலரும் என்னிடம் தெரிவித்தனா். இதுகுறித்து முதல்வா் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன்.
இதற்குப் பதில் அளித்த முதல்வா், தற்போது புதிதாக வந்திருக்கக்கூடிய கூட்டுறவுச் சட்டப்படி, மத்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. தற்போது தோ்தல் அறிக்கையில் தெரிவித்துவிட்டு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மத்திய அரசு அனுமதி அளிக்காவிட்டால், வேளாண் கடனை தள்ளுபடி செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். ஆகவேதான் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பைத் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாா் அவா்.