முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க பாஜகவிடம் ரூ. 1,000 கோடி பெற்ற ஹுமாயூன் கபீர்? மே. வங்கத்தில் கூட்டணியை முறித்தார் ஓவைசி!
முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க பாஜகவிடம் ரூ. 1,000 கோடி பெற்ற ஹுமாயூன் கபீரைப் பற்றி...
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய புதிய கட்சித் தொடங்கிய ஹுமாயூன் கபீர், பாஜகவிடம் ரூ. 1,000 பெற்றதாக விடியோ வெளியான நிலையில், அவருடனான கூட்டணியை முறித்துள்ளார் அசாதுதீன் ஓவைசி.
மேற்கு வங்கத்தில் மொத்தமாக 294 தொகுதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்.23 மற்றும் ஏப். 29 ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையும் பாஜக தலைமையிலான கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
Advertisement
Advertisement
கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மமதாவை நீக்கிவிட்டு புதியதாக ஆட்சியை அமைக்க பாஜக மிகத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அதேவேளையில், பாஜகவுக்கு எதிராக இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக செலாற்றி வருகிறது.
திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர் ஹூமாயூன் கபீர் தொடங்கியுள்ள புதிய கட்சியான ஆம் ஜனதா உன்னயான் கட்சியுடன் சேர்ந்து 294 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி போட்டியிடுவதாக அகில இந்திய மஜ்லீஸ் இத்தெஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்திருந்தார்.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான ஹூமாயூன் கபீர், கடந்தாண்டு மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி கட்டப்போவதாக சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன்பின்னர், புதியதாக ஆம் ஜனதா உன்னயான் கட்சியைத் தொடங்கினார். மேலும், அவரது கட்சி 183 இடங்களில் போட்டியிடும் எனக் கூறி 15 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக திரிணமூல் கட்சியின் வாக்குகளைப் பிரிக்கும் வகையிலும், முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையிலும் ஹூமாயூன் கபீர் செயல்படுவதற்காக, பாஜகவிடம் ரூ. 1,000 கோடி பெற்றதாக ஒரு விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
பிரதமர் அலுவலகத்துடன் கபீர் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும், “முஸ்லிம்களை ஏமாற்றுவது எளிது” என ஹூமாயூன் கபீர் கூறுவது போலவும், ரூ. 1,000 கோடிக்கு முன்பணமாக ரூ. 200 கோடி பெற்றதாகவும் அந்த விடியோவில் பதிவாகியிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து அந்த விடியோவில் இருந்து வெளிவரும் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும், தனக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைமை ஒரு அவதூறு பரப்புவதாக கபீர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விடியோ செய்யறிவு விடியோ என்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கபீருக்கு வழங்கிய ஆதரவைத் திரும்ப பெறுவதாக அகில இந்திய மஜ்லீஸ் இத்தெஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக வங்கத்தைச் சேராத முஸ்லீம் வேட்பாளரான பூனம் பேகத்தைக் களமிறக்கியிருந்தார் ஹூமாயூன் கபீர். இந்த நடவடிக்கை திரிணாமூல் காங்கிரஸின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000; பொது சிவில் சட்டம்! மேற்குவங்க பாஜக வாக்குறுதிகள்!
The video purportedly shows Humayun Kabir claiming links with BJP leaders and discussing a plan to divert minority votes in Bengal in return for large funds, including an alleged advance payment of Rs 200 crore.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.