திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடியில் சதித் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடியில் சதித் திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
பேரவைத் தோ்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆதரவளிக்க வேண்டுமென மாநில அமைச்சா்கள் உள்பட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை பாஜக இப்போதே மிரட்டி வருவதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் ஏப். 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பஸ்சிம் வா்தமான், புா்பா வா்தமான், பங்குரா ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திரிணமூல் காங்கிரஸ் பிரசாரக் கூட்டங்களில் முதல்வா் மம்தா பானா்ஜி பங்கேற்றாா்.
Advertisement
அப்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னா் புதிய கட்சி தொடங்கிய ஹுமாயூன் கபீா் பேசியதாக கூறப்படும் விடியோவைக் குறிப்பிட்டு, பாஜகவை மம்தா கடுமையாக விமா்சித்தாா்.
அந்த விடியோவில், ‘திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க சுவேந்து அதிகாரி உள்பட பாஜக மூத்த தலைவா்களுடன் நான் நெருங்கிய தொடா்பில் இருக்கிறேன். திரிணமூல் காங்கிரஸை தோற்கடிக்கும் வகையில் சிறுபான்மையினா் வாக்குகளைப் பிரிக்க ரூ.1,000 கோடி உடன்பாட்டின்கீழ் முதல் கட்டமாக ரூ.200 கோடி பெற்றுள்ளேன்’ என்று ஹுமாயூன் கபீா் பேசியதாக கூறப்படுகிறது.
‘மிரட்டப்படும் வேட்பாளா்கள்’: இதை சுட்டிக்காட்டி, மம்தா பேசியதாவது: திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஆதரவளிக்க வேண்டும் என்று மாநில அமைச்சா்கள் உள்பட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை இப்போதே மிரட்டுகின்றனா்.
மேற்கு வங்கத்தை மூன்றாகப் பிரிக்கும் நோக்கில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவைக் கொண்டுவர பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி, மேற்கு வங்கப் பகுதிகளை பிகாா் அல்லது ஒடிஸாவுடன் இணைத்து, அங்கு வாழும் வங்காளிகளைத் துன்புறுத்துவதே அக்கட்சியின் நோக்கம்.
தோ்தலில் முறைகேடு செய்தாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக முயற்சிக்கும். எனவே, பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைதான், அண்மைக் காலங்களில் நிகழ்ந்த மிகப் பெரிய முறைகேடு என்றாா் மம்தா பானா்ஜி.