15.7.1976: தேனாம்பேட்டையில் காமராஜ் நினைவுச் சின்ன அடிக்கல் நாட்ட இடைக்காலத் தடை
தேனாம்பேட்டையில் காமராஜ் நினைவுச் சின்ன அடிக்கல் நாட்ட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது பற்றி...
சென்னை, ஜூலை 14 - தேனாம்பேட்டை காமராஜ் திடலில் காமராஜ் நினைவுச் சின்ன அடிக்கல் நாட்டும் பணியை தொடர்வதினின்றும் த.நா.கா.க. (பழைய காங்கிரஸ்) தலைவர் பி. ராமச்சந்திரனுக்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி த. நா.கா.க. டிரஸ்டிகளில் ஒருவரான எம். தனுஷ்கோடி தாக்கல் செய்த மனுவின் பேரில் ஹைகோர்ட் நீதிபதி எஸ்.மோகன் இன்று த.நா.கா.க. தலைவருக்கு இடைக்காலத் தடை விதித்தார். தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நாளைய தினம் பழைய காங்கிரஸ் (அ.இ.கா.க) தலைவர் அசோக் மேத்தா அடிக்கல் நாட்டுவதாக இருந்தது.
த.நா.கா.க. டிரஸ்டுக்குச் சொந்தமான இடத்தில் எந்தப் பணியையும் ஆரம்பிப்பது அல்லது எந்தக் கட்டுக்கோப்பையும் எழுப்புவது அல்லது எந்த நினைவுச் சின்னத்தையும் எழுப்புவது ஆகியவற்றினின்றும் பி. ராமச்சந்திரனை தடுக்க இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று டிரஸ்டிகளில் ஒருவரான வாதி கோரியிருந்தார்.
த.நா.கா.க. தலைவர் பி. ராமச்சந்திரன் தனது பிரமாண வாக்குமூலத்தில் அ.இ.கா.க. (பழைய காங்கிரஸ்) தலைவர் அசோக் மேத்தா ஜூலை மாதம் 15ஆம் தேதியன்று காமராஜ் நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்கு ஏற்பாடாகியிருப்பதையும், நினைவுச் சின்னம் கட்டுவதென 1975லேயே முடிவு செய்யப்பட்டிருந்த தென்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.
Advertisement
Advertisement
நீதிபதி மோகன் தமது உத்தரவில், டிரஸ்ட் தன்மை வாய்ந்ததாக சொத்து இருந்து வருகிற தென்றும், இந்தச் சொத்து சம்பந்தமாக பிரதிவாதி ராமச்சந்திரனுக்குள்ள உரிமை பற்றி வழக்கு இருந்து வருவதையும் குறிப்பிட்டு அவ்வழக்கு பைசல் ஆகும் வரையில் அந்த சொத்தில் மாறுதல் எதுவும் செய்வது விரும்பத்தக்கதல்ல என்று எடுத்துரைத்து, இந்த டிரஸ்டு சொத்து எதிலும் நேரிடையாகவோ அல்லது த.நா.கா.க. மூலமோ எந்த பணியும் ஆரம்பிப்பதினின்றும் அல்லது எந்தக் கட்டுப்கோப்பையும் எழுப்புவதினின்றும் அல்லது நினைவுச் சின்னம் எதையும் எழுப்புவதினின்றும் ராமச்சந்திரனும், அவரது ஏஜண்டுகள் அல்லது ஊழியர்களும் இடைக்கால உத்தரவு மூலம் தடை செய்யப்படுவதாகக் கூறியுள்ளார்.
எம். பக்தவத்ஸலமும், எம். தனுஷ்கோடியும் பிரஸ்தாப ஸ்தாபனத்துக்கு ராமச்சந்திரன் டிரஸ்டியல்ல என்று உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த வழக்கு பைசலுக்குக் காத்திருப்பது தெரிந்ததே.
15.7.1976: Interim stay on laying the foundation stone for the Kamaraj memorial in Teynampet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.