28.5.1976: 64 சட்டங்களுக்கு பாதுகாப்பு - அரசியல் சட்ட 40-வது திருத்தம் அங்கீகாரம்
64 சட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அரசியல் சட்ட 40-வது திருத்தத்துக்கு அங்கீகாரம்...
புது டில்லி, மே. 27 - 64 மத்திய, மாநிலச் சட்டங்களைக் கோர்ட்டுகளின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாக்க வகை செய்யும் அரசியலமைப்பு 40வது திருத்த மசோதா இன்று ராஜ்ய சபையில் நிறைவேறியது.
இம்மசோதா ஏற்கனவே லோக் சபையில் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டங்கள் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என்று காரணம் கூறி கோர்ட்டுகளில் ஆட்சேபிக்க முடியாது.
நாட்டின் கடல் எல்லைகளை வரையறுக்க சட்டம் இயற்றவும் இம்மசோதா பார்லிமெண்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.
Advertisement
Advertisement
ஆட்சேப விஷயங்கள் பிரசுரத் தடுப்பு சட்டத்தையும் மத்திய கணக்குகளை, இலாகா ரீதியாக்குவதையும் இந்த 64 சட்டங்களில் சேர்த்திருப்பதை நீக்கக் கோரி எதிர்க் கட்சியினர் கொண்டு வந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. புபேஷ்குப்தா (வலது கம்), விசுவநாத மேனன் (இடது கம்) இந்தத் திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.
9வது ஷெட்யூலில் சேர்த்து அரசியலமைப்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள சட்டங்களில் நிலச் சீர்திருத்த சட்டங்களும் பொருளாதாரக் குற்றங்கள் சம்பந்தமான சட்டங்களும் அடங்கும்.
புதிதாக 64 சட்டங்கள் சேர்த்திருப்பதையடுத்து, இதுவரை 9வது ஷெட்யூலில் சேர்க்கப்பட்டுள்ள மொத்த சட்டங்கள் 188 ஆகும். அதாவது இந்தச் சட்டங்கள் கோர்ட் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதாக்கப்பட்டுள்ளன. ...
ஹிந்தியிலும், இதர மாநில மொழிகளிலும் அரசியல் சாசனம்
புதுடில்லி, மே. 27- அரசியல் சாசனத்தை, ஹிந்தியிலும், இதர பிராந்திய மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக மொழி பெயர்த்து வெளியிட வகை செய்வதற்கு பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வரப்படும்.
மத்ய ஹிந்தி கமிட்டியின் கூட்டம் புதனன்று டில்லியில், பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் நடந்தது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், 60 சதவீதம் அரசு அலுவல்களை ஹிந்தி மொழி மூலம் நடத்துவதற்கு, வருடாந்திர திட்டம் ஒன்றையும் இந்தக் கமிட்டி அங்கீகரித்தது. அரசுத்துறை நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பொருட்களின் விவரத்தை ஹிந்தியிலேயே குறிப்பிடுவது என்றும் இந்தக் கூட்டம் முடிவு செய்தது.
ஹிந்தி மொழியினர் வசிக்கும் பகுதிகளில் இயந்திரங்கள் தொடர்பான நோட்டீசுகள், பில்கள் முதலிய யாவற்றையும் ஹிந்தியிலேயே தயாரிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் முடிவு செய்தது.
May 28, 1976: Protection for 64 Laws - 40th Constitutional Amendment Ratified.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.