'புளூவேல்' விபரீதங்கள் தொடர்பாக தூர்தர்ஷனில் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கண்டிப்பு காட்டிய உச்ச நீதிமன்றம்
இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்த அபாயகரமான 'புளூவேல்' விளையாட்டின் விபரீதங்கள் குறித்து எடுத்துக் கூறும் வகையில், அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை...
புதுதில்லி: இளைஞர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்த அபாயகரமான 'புளூவேல்' விளையாட்டின் விபரீதங்கள் குறித்து எடுத்துக் கூறும் வகையில், அரசின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒளிபரப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அபாயகரமான 'புளூவேல்' விளையாட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது மத்திய அரசு சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.எஸ்.நரசிம்மா, "மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உருவாக்கிய குழு கண்டறிந்த தகவல்களின் படி இந்தியா முழுவதும் ப்ளூவேல் விளையாட்டால் நிகழ்ந்ததாக மொத்தம் 28 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. இன்னும் மூன்று வாரங்களில் மேலும் தகவல்கள் வெளியாகும்.
Advertisement
Advertisement
இந்த விளையாட்டை தடுத்து நிறுத்துவதில் அரசு உறுதியுடன் இருக்கிறது. அரசின் பிற அமைப்புகள் மற்றும் இணையதளங்களுக்கு 'ப்ளூவேல்' விளையாட்டு தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
அவரது வாதங்ளுக்குப் பிறகு நீதிமன்ற அமர்வு தெரிவித்ததாவது:
'புளூவேல்' விளையாட்டு உயிருக்கு ஆபத்தானது. மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதுவானாலும் அது கண்டிப்பாக கண்டிக்கபப்ட்ட வேண்டிய ஒன்றுதான். எனவே 'ப்ளூவேல்' விளையாட்டின் விபரீதங்கள் குறித்து அரசின் தூர்தர்ஷன் தொலக்காட்சியில் 'ப்ரைம் டைம்' எனப்படும் முக்கியமான நேரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றினை ஒளிபரப்ப வேண்டும்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்னும் ஒருவாரத்துக்குள் தூர்தர்ஷன் தயார் செய்ய வேண்டும். குறைந்தது 10 நிமிடமாவது இந்த நிகழ்ச்சி நீடிக்க வேண்டும். குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான கருத்தாக்கத்தை உள்துறை அமைச்சகம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவற்றுடன் இணைந்து தூர்தர்ஷன் இறுதி செய்யட்டும்.
தூர்தர்ஷன் மட்டுமின்றி தனியார் தொலைக்காட்சிகளும் சேனல்களும் இத்தகைய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறதா என்பதனை அரசு கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.